ஜனவரி, 2011 க்கான தொகுப்பு

கம்யூனிசம் எனும் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மணி – அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை

Posted in அலெக்சான்ட்ரா, கம்யூனிசமும் பெண்களும், கீழைக்காற்று, புத்தக அறிமுகம் with tags , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிசமும் குடும்பமும் என்ற நூலைப் பற்றியான அறிமுகம் செய்யலாம் என்று நினைத்திருக்கையில் குருத்து தன் வலைப்பதிவில் பதிந்துவிட்டார்.

நூலறிமுகத்திற்கு கீழேயுள்ள படத்தைச் சொடுக்கவும்.

இந்நூலை எழுதிய தோழர் அலெக்சான்ட்ரா பற்றிய சில குறிப்புகள்.

அலெக்ஸான்ட்ரா கொல்லொன்டை என்றழைக்கப்படுகின்ற அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை 31-03-1872 அன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஜார் மன்னருக்கு சேவை புரியும் ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பல மொழிப்புலமை பெற்ற இவர் தன் பத்தொன்பதாவது வயதில் விளாடிமிர் என்ற இராணுவ வீரரைத் திருமணம் செய்தார், விரைவிலேயே அது ஒரு அடிமை வாழ்க்கை என்பதை உணர்ந்த அலெக்ஸான்ட்ரா தன்னுடைய திருமண வாழ்வை முறித்தார். 1894 களில் ரஷ்ய தொழிற்சாலைகளில் தொழிலாளிகளின் அவல வாழ்நிலையைக் கண்ட அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் உள்ள தொழிலாளர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் இருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பிற்பாடு மார்க்சிய சித்தாந்தத்தில் முழு ஈடுபாடு கொண்டதன் காரணமாக சமூகக் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ரஷ்யாவில் ஜாரிய அடக்குமுறையினால் தவித்த ஃபின்லாந்து மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த இவர் ’ஃபின்லாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் நீட்சியாக ரஷ்ய தொழிற்சாலைகளில் உள்ள பெண் தொழிலாளிகளின் உரிமைக்காகவும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடினார். 1914 வரை மென்ஷ்விக் கட்சியில் இருந்தார், அதன் பிறகு 1915 ல் போல்ஷ்விக் கட்சியில் இணைந்த இவர் அன்றைய ரஷ்ய சோஷலிசக் கட்சியின் மிகப் பெரிய புரட்சியாளர் மற்றும் பெண் விடுதலைப் போராளியாக தன்னை அர்பணித்துக் கொண்டார். 1917 களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (போல்ஷ்விக்) முதல் பெண் மத்தியக்கமிட்டி உறுப்பினராகவும், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் ஏற்பட்ட சோஷலிச அரசின் சமூக நலத்துறை கமிசாராகவும் இருந்தவர். இக்காலகட்டத்தில் (1920) இவர் எழுதிய முக்கியமான நூல்தான் ‘ கம்யூனிசமும் குடும்பமும் – உற்பத்தியில் பெண்களின் பங்கும் குடும்பத்தில் அதன் தாக்கமும் ‘, இது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏடுகளிலும் (ப்ராவ்தா) இவர் தனது புரட்சிகர எழுத்துக்களைக் கொண்டு சென்றார்.

பிறகு ரஷ்யாவில் தொழிற்சங்கங்களை அணுகுவதில் லெனினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அலெக்ஸான்டர் ஷ்லியாப்னிகோவுடன் ( மத்தியக்கமிட்டி உறுப்பினர் & தொழிலாளர்களுக்கான கமிசார்) சேர்ந்து போல்ஷ்விக் கட்சியை விமர்சித்து ‘உழைப்பாளிகளின் கண்டனம்’ என்ற துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தார். 1922 ல் கட்சிக்குள் குழுவாதம் / பிரிவினைவாதம் இருந்தால் புரட்சியை சாதிக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார் லெனின், ஆயினும் ஸ்டாலின் காலகட்டங்களில், நார்வே (1923-1925 & 1927-1930), மெக்சிகோ (1925-1927), ஸ்வீடன் (1930-1945) போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கப்பட்டார். தன் கருத்துக்களை மிகவும் துணிச்சலாக வைக்கும் தைரியம் கொண்டவராதலால் ஒளிவுமறைவின்றி செயல்பட்டார், ஸ்டாலினால் 1934 – 1939 காலகட்டங்களில், ஆரம்பத்தில் இருந்த பல மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் துரோகிகளாகக் கண்டறியப் பட்டு களையெடுக்கப்பட்ட சமயத்தில் கூட இவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,. கடைசியாக 1945 ல் ஸ்வீடனில் நல்லெண்ணத் தூதராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரஷ்யாவிற்கே வந்து குடியேறினார், உடல் நலக் குறைவினால் 9-03-1952 ல் இறந்தார். உலக சரித்திரத்தில் வெளிநாடுகளுக்கு தூதுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குறியவர்.

ரஷ்யா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்த அலெக்ஸான்ட்ராவின் அன்றைய எழுத்துக்கள், இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக,அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை நினைவுப்படுத்துகிறது, அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நமது கடமையையும் உரத்துக் கூறுகின்றது.

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!! அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா !!!

Posted in கிறுக்கியது, கீதையின் மறுபக்கம், பகவத் கீதை, பீத்துணி, புத்தக சந்தை, வாழ்வியல் சிந்தனை, வீரமணி, SOCIAL ISSUES with tags , , , , , , , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!!
அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா…….

(குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கம் யார் மனசையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல, நோகடித்திருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை, யார் நொந்துபோவார்கள் என்பதும் தெரிந்ததே !!!)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இருக்கிற மீனாக்ஷி புத்தகக் கடைக்கு வெளியே 1000 ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை வெறும் 120 க்கு விற்கப்படும் என ஒரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது, சரி மலிவு விலைப் பதிப்பாக இருக்கும் என நினைத்து உள்ளே சென்று அதைப் பார்த்தால் ஆச்சரியம்…..ஆனால் உண்மை !! உள்ளே நூலகப் பதிப்புதான் (ஒரிஜினல் ப்ரிண்ட்) இருந்தது. அனைவரும் பகவத் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்னத்துடன் தான் இவ்விலைக்கு விற்பதாக விற்பனையாளர்/உரிமையாளர் கூறினார். உன் நல்லெண்ணம் எனக்குத்தெரியாதா என நினைத்துக் கொண்டே உள்ளே பக்கங்களைப் பார்க்கலானேன்.கிட்டதட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகம் தரமானதாக, தடிமனான அட்டையில் பைண்டிங் செய்யப் பட்டிருந்தது.1000 ரூபாய் வொர்த் இல்லாவிட்டால் கூட குறைந்த பட்சம் 750 ரூபாயாவது இருக்கும். ஆங்காங்கே கிருஷ்ணனின் அவதாரங்கள்,போர்க்களத்தில் அறிவுரை சொல்லும் காட்சிகள், கடவுளர்கள் அருள்பாலிக்கும் காட்சிகள் எனப் பல வண்ணப்படங்களுடன் வேறு இருந்தது. எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ என ரஜினி சொல்ற மாதிரி, நாலு நாலா மனுஷன் வாழ்வப் பிரிச்சுகோனு கீதைல சொல்லுது அதாவது பிறப்பு, மூப்பு, நோய் படுதல் கடைசியாக இறப்பு…….முடியலடா சாமி…..

கூடவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது என்று வேறு இருக்கிறது, கங்கை தன்னைத் தேடி வருபவர்களை மட்டும் தான் முக்தி பெற வைக்குமாம், ஆனால் கீதையோ ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அனைவரையும் முக்தி பெற வைக்கிறதாம்…..அது போல இது காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்ததாம், காயத்ரி ஜெபிப்பவனை மட்டும் தான் முக்தியடைய வைக்குமாம், கீதை படிப்பவர்களை மட்டுமல்லாது மற்றவர்களும் வீடு பேறு அடைய வழிவகை செய்யுமாம். இப்படியிருக்க நமக்கு அவன் முக்தி தருவானா?? விடு பேறு தருவானா ……அட வீடுதான் தருவானா……ஹ்ம்ம்ம்ம்ம்.

சரி மேட்டருக்கு வறேன்…..புத்தகத்தைப் பார்த்ததும் வியந்துதான் போனேன்.
இவ்ளோ விலைக்கு எப்படிக் கட்டுப்படியாகும்னு தெரியல. என்னுடன் வந்திருந்த நண்பர் வாங்கலாமா வேண்டாமா என பயங்கரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இதை உணர்ந்த நான் “சும்மா வாங்குங்க, படிக்கலனா கூட பழைய புத்தகக் கடைல போட்டுடலாம், இதை விட அதிகமாக் கிடைக்கும் ” என வலியுறுத்தினேன். சிரித்துக் கொண்டே” நீங்க சொல்றதும் சரிதான், ஆனா நான் அதுக்காக மட்டும் வாங்கல, இவனுங்க நம்ம மக்கள எப்படில்லாம் ஏமாத்துறானுங்கன்னும் தெரிஞ்சுக்கலாம், பல நேரங்கல்ல கீதையைப் பத்தி விமர்சிக்கிற நேரம் வருது, அதுக்கு கூட நாம படிக்கலாம் “ என்று கூறினார். நானும் அவரும் தலா ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டோம்.

அப்படியே நடந்து சென்று கொண்டுருந்தோம் நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்தார், கையில் வைத்திருந்த கீதையைப் பார்த்து, “ ஏன் அந்தப் புத்தகத்தை வாங்கி காசை வீணாக்குறீங்க ” என சற்றே கோபத்துடன் வினவினார், மேற்படி நான் வாங்கியதன் சூட்சமத்தை அவரிடம் சொல்ல “அட நல்ல ஐடியாதாங்க! என் வீட்ல கூட அடிக்கடி தண்ணிப் ப்ரச்சினை வருது….. என் கொழந்தைக்கு தொடைக்க துணி உபயோகிச்சு கட்டுப்படியாகல, துணியாவது மிச்சமாகும்ல……நெருக்கடி நேரத்துல நாங்க கூட உபயோகிச்சுக்கலாம் ” என சீரியசாக சொல்ல கூடியிருந்த அனைவரும் பயங்கரமாகச் சிரித்துப் போனோம்.

சிறிது நேரம் கழித்து தி.க.வின் பெரியார் புத்தக நிலையத்திற்குச் சென்றோம் படிக்க உபயோகமுள்ளவை இங்கு கிடைக்கும் என நினைத்து புத்தகங்களைப் புரட்டினால், புத்தகங்களின் விலை விண்ணை முட்டியது. புத்தகங்களின் எழுத்தைப் பெரிதாக்கி, பக்கங்களையும் அதிகரித்து அட்டைப்போட்டு மறுபதிப்பாக வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக புத்தகங்கள் தீர்ந்து விட்டால் தான்(அல்லது குறைவாக இருந்தால்) மறு பதிப்பு வரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கோ இரண்டு பதிப்புகளும் அருகருகில் வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக தொழிலதிபர், கல்வி நிறுவனர், தஞ்சையின் கல்வித் தந்தை, வாழ்வியல் சிந்தனையாளர் எனப் பல பட்டங்களைத் தாங்கியுள்ள முன்னாள் நாத்திகர் ??? ணிமரவீ (சாரி – பேர் சொல்ல விருப்பமில்லீங்க) எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை கூறலாம்.அதன் விலை 200 ரூபாய் (கீதை 120 ரூபாய்). பல புத்தகங்களின் விலையும் அப்படியே. இவ்வளவு அதிகமாகப் பெரியாரின் கருத்துகள் சோரம் போவதை எண்ணி வருந்தினேன்.

வேறு ஏதாவது புத்தகங்கள் கிடைக்கிறதா என நோட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் “ஏங்க பகவத்கீதை மாதிரி இன்னுமொரு புத்தகத்தை காமிக்கிறேன், இங்க வாங்க ” என நண்பர் கூறினார். என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே பார்த்தால் அது ணிமரவீயின் வாழ்வியல் சிந்தனை(1-8). ஏற்கனவே அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பார்க்கும் பேறை அப்பொழுதுதான் பெற்றேன்.ஒரு புத்தகம் தான் எழுதிருக்காருன்னு பாத்தா கிட்டதட்ட 8 பகுதியாம். “அட இவ்ளோ பணம் கொடுத்து ஒங்க கொழந்த பீத்தொடைக்கனுமா, அதுக்கு இன்னொரு பகவத் கீதை வாங்கிடுங்கன்னு அறிவுறுத்தினேன் ” நாங்க தான் இப்படி பகவத்கீதை வாங்கினோம்னு பாத்தா, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னும் பிறக்காத தன் குழந்தைக்காக கீதைகள் வாங்கியிருப்பதாகக் கூறினார். அட நெசமாத்தானுங்க…………………

சமகாலங்களில் இந்து மதம் எந்த அளவிற்கு தன் விஷக்கொடுக்குகளை வளர்த்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சில விசேஷ நாட்களில் மட்டுமே கூடும் கூட்டம், கடந்த சில ஆண்டுகளாக எல்லா நாட்களிலும் கூடுகின்றது. அஷ்டமி, நவமி, கிருத்திகை, பாட்டிமா, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோவில்களில் மிகவும் அதிகமான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது, அஷ்டயத்திருதியை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை, அன்று கோவில்களில் மட்டுமல்லாது நகைக்கடைகளிலும் அதிகமான கூட்டத்தை காண முடிகிறது, எப்படி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளை வைத்துக் கொண்டாடுகிறார்களோ (கக்கூஸ் போகும் தினம் என வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) அது போல இவர்களும் எல்லா நாட்களையும் ஏதாவது சொல்லி புனித நாளாக்கிவிடுகிறார்கள். (நெசமாவே உக்காந்து யோசிப்பாங்க போல).

பார்ப்பனர்கள் இந்துதுத்வாவைப் பரப்புவதற்கு எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன புத்தக்கக் கடை ஒன்று சிறிய உதாரணம் தான், மேலும் பல இந்துப் பண்டிகைகளின் பொழுது இவர்களின் சேவைப்பிரிவான சேவா பாரதி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பல போட்டிகளை வைப்பது, குழந்தைகளுக்கு இந்து வெறியை ஊட்டக்கூடிய தலைப்புகளில் பாட்டு, நடனம் மற்றும் பேச்சுப் போட்டிகளை வைத்து அவர்களை தன் வசப்படுத்துவது போன்ற விஷம வேலைகளைச் செய்கிறது. இப்படி அசுர (இதுல மட்டும் எங்க வேகம் வேணுமாக்கும்) வேகத்தில் செயல்பட்டு இந்துமதத்தின் இருப்பையும், பரப்புதலையும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் இந்தாளு பன்றது (அதாங்க ணிமரவீ ) கடுப்புகளைக் கெளப்புது யுவர் ஆனர். எங்கெங்க எல்லாம் கல்லா கட்டணுமோ எல்லாத்தலையும் கட்டியாச்சு, கடைசியில மிச்சமிருக்கிற அரவிந்தர், அன்னை,ஓஷோ, ஜக்கி வாசுதேவன், மாதா அமிதானந்தமாயி, நித்யானந்தன், யோகி போன்ற பல ஆன்மீகவாதிகளிடமும் தன் திறமையைக் காட்ட வேணாமா அதான் வாழ்வியல் சிந்தனைகள் எழுதிட்டு இருக்காரு (இதுவரை எட்டு தொகுதிகள் என நினைக்கிறேன்- இன்னும் எத்தனையோ??). இப்படி தன் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்ட்தோ அல்லது இருக்கிறதோ?? குறைந்தபட்சம் அதற்காகவாவது செயல்பட்டால் போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மானமிகு ணிமரவீக்கு அது இருந்தாதான் எப்பவோ செஞ்சிருப்பரே!

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!

Posted in அடிடாஸ், உட்லான்ஸ், எலிக்கறி, கடன், கிறுக்கியது, சந்தை, தனி நபர் நுகர்வு, நச்சுக் கிழங்குகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பகுக்கப்படாதது, மறுகாலணி, மாயை, ரீபொக், ரோலக்ஸ், வாங்கும் திறன், ஹார்லி டேவிட்சன், GATT, SOCIAL ISSUES with tags , , , , on ஜனவரி 6, 2011 by குட்டகொழப்பி

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்!
நுகர்தல் இல்லையேல் சாதல்!

நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.

இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன. இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

கோக், பெப்சி போன்ற மேல்நாட்டு குளிர்பாண நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம், இந்தியா முழுக்க டீலர்கள் அமைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு வியாபாரிகளைக் கவருவதற்கு ஐஸ் பாக்ஸ், டீ சர்ட், பள பளக்கும் விளம்பரச் சுவரொட்டிகள் போன்ற ஜிகினாப் பொருள்களை இலவசமாக வழங்குவதால் கவரப்பட்டு கிராமங்களின் சாதாரணமான குக்கிராமங்களில் கூட இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோப்பு, பேஸ்ட் முதல் நாப்கின்கள் வரை டி.வி க்களில் வரும் விளம்பரங்களை வைத்து வாங்கும் நிலையே இன்று கிராமங்களில் அதிகரித்துள்ளது.

தங்கள் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும் இதற்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். முக்கியமாக இளைய தலைமுறையினரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்ற இத்தகைய விளம்பரங்கள், காலணிகள் என்றால் உட்லான்ஸ், ரீபொக் அல்லது அடிடாஸ், ஆடைகள் என்றால் ஏரோ, ஆலன் சோலி, லூயி ஃபிலிப், சோடியாக், கலர் ப்ளஸ் அல்லது க்ரொகடைல், கைக்கடிகாரங்கள் என்றால் ரோலக்ஸ், ஒமெகா அல்லது ரேடோ போன்ற தயாரிப்புகள் தான் தரமானவை என்று அவர்களை அறியாமல் மனதில் புகுத்தப்படுகின்றது. சந்தையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்துகிற இரு சக்கர வாகனங்களுக்கான கவர்ச்சிகர விளம்பரங்கள், தேவைக்குதான் வாகனங்கள் என்பதிலிருந்து பந்தா காட்டவும், படாடோபத்திற்குமான ஒரு சின்னமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களின் அறிமுகம் இதற்கு சிறந்த உதாரணம். நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் போய் ஏழு முதல் ஐம்பது லட்சம் வரையிலான ஹார்லி டேவிட்சன் வகையிறா வாகனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் அட்சய த்ரிதியை அன்று ந‌கை வாங்கினால் ந‌கை சேர்ந்து கொண்டிருக்கும் என்ற‌ மூட‌ப்ப‌ழ‌க்க‌த்தை, பார்ப்பனர்கள் மூல‌மாக‌ ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கூற‌வைத்து ம‌க்க‌ளை மேலும் வாங்குவ‌த‌ற்கான‌ ஆசையை தூண்டுவ‌தே இவ‌ர்க‌ளின் முக்கிய‌ இல‌க்காக‌ உள்ள‌து. இதன் மூல‌ம் ம‌க்க‌ளை ஓட்டாண்டியாக்குவ‌தோடு, இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் மூல‌ம் ஒரு பொருளை வாங்குவ‌தற்காக‌ கொலையும் செய்ய‌லாம் என்ப‌தைப் போன்ற மனோபாவத்தை உருவாக்குகிறது..

இது போன்று தேவைக்கு அதிகமாக‌ வாங்க‌வைத்து க‌ட‌னாளியாக்குவ‌தற்கே இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. எதுவெல்லாம் குடும்ப‌த்தை, இச்சமூகத்தை சீர‌ழிக்க‌க் கூடியதோ அதையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவதற்காக‌வே இன்றைய‌‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் காற்றை விட வேக‌மாக‌ச் சென்றுகொண்டிருக்கிற‌து. நுகர்பவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஆட்டு மந்தைகளாக மாற்றி தாங்கள் நினைத்தவற்றை சாதித்துக்கொள்ளும் வேலையை இத்தகைய விளம்பரங்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றன. மக்கள் தாங்கள் ஒரு மாதம் சம்பாதிப்பதை பெரும்பாலும் நுகர்வதற்கே அதிகபட்சமாக செலவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறுவதும், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், குழப்பம் நிலவவும் முடிவில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பிரித்துவிடும் நிலைக்கோ அல்லது தற்கொலைக்கு தூண்டும் விதத்திலோ கொண்டு போய் விடுகிறது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் போடுகிற வாசணை திரவியங்கள் அல்லது அவரால் விளம்பரப் படுத்தப்படுகிற பொருட்கள், வெளிநாடுகளில் என்று சந்தை படுத்தப் படுகின்றதோ அதே தேதியில், அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது, அது போல ஹாரி பார்ட்டர் புத்தகங்களும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்படுவதும் அப்புத்தகங்கள் அவர்களால் படிக்கப் படுகிறதோ இல்லையோ முதல் நாளே வாங்கிவிடுவது போன்றவை, மிகப்பெரிய கௌராமாகப் பார்க்கப்பட்டு, பெருமிதம் கொள்ளும் மனோபாவமும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. இதன் மூலம் உலகளவில் புகழ் பெற்ற பொருள்களை வெறி பிடித்து நுகர்வதால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் பார்ப்பதாகவும் நினைக்கிறார்கள்

1990 கள் வரையில் இந்தியாவில் இருந்த மொத்த ஷாப்பிங் மால்கள் எனப்படுகிற மிகப்பரிய வணிக வளாகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு திறந்துவிடப்பட்ட பிறகு அவற்றின் வளர்ச்சி கற்பணை செய்ய முடியாத நுகர்வுவெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், இவ்வகை நுகர்வு வெறி நமது உண்ணும் முறையிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய மால்களில் உள்ள மெக் டொனால்ட், கெ.எஃப்.சி, சான்ஸ் கிட்சென், வேன்க்ஸ் கிட்சென், பீசா ஹட், பதான்கோட், காஃபி டே போன்ற மேல்தட்டு உணவகங்கள் வானொலி, தொலைகாட்சிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் வெறியை ஏற்படுத்துகிறது.

தனி நபர் நுகர்வு வெறிக்கு மூலம், இந்திய அரசால் 1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மய, தாராளமய உலகமய சித்தாந்தத்தைக் கொண்ட காட் (GATT) ஒப்பந்தமே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய சந்தை, எதை சொன்னாலும் நம்பக் கூடிய அடிமை புத்தி கொண்ட மக்கள், வெளி நாட்டுப் பொருள்கள் என்றால் தரம் அதிகமாக இருக்கும் என்ற கற்பிதங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான தொழில் நுட்பத்தையும் தொழில்நுட்ப சாதனங்களையும் இன்னபிற கண்ட கண்ட கழிசடைகளைக் கூட மூன்றாம் உலக நாடுகளில் விற்று காசாக்கலாம் என்ற ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் போன்றவை தங்கள் சமஸ்தான சந்தைகளை அமைக்க சாதக அம்சங்களாக மேலை நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இது போன்ற தனி நபர் நுகர்வை சமூகத்தில் ஒரு கவுரவமான செயலாகவும் அதிகமாக நுகர்பவனை மதிப்பு மிக்கவனாகவும் இச்சமூகமும் முதலாளித்துவ உலகமும் காட்டமுனைகிறது. அதிகமாக நுகர்தலே நிம்மதி, அதிகமாக நுகர்வதே பெருமையான விஷயம், புதிது புதிதாக வித விதமாக நுகர்தல், போன்றவை நுகர்தலை போதை வஸ்துவாகவே மாற்றி ஒருவித மயக்க நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.

இது ஏதோ மிகப் பெரிய சமுதாயப் பொருளாதார புரட்சி என்றும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது, யாரும் முன்னைப் போல பரம ஏழைகளாக இல்லை என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் இது போன்ற சந்தைகள் யாருக்கானதாக இருக்கிறது, யார் நுகர்வதற்காக வந்துள்ளது ? இது தினம் தினம் பட்டினியால் செத்து மடியும், நோஞ்சான்களாக இருக்கும் இந்தியக் குழந்தைகளின் பட்டினியை போக்குவதாக இருக்கிறதா? எலிக்கறி, நச்சுக் கிழங்குகள் தின்று தங்கள் பசியை ஆற்றிக்கொள்ளும் விவசாயிகளின் பட்டினியினைப் போக்குவதாக உள்ளதா? மக்கள் தொகையில் 30 கோடி பேர் தினமும் உறங்கச் செல்லும் முன் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ளும் ஏழைப் பாழைகளின் பசியை போக்குவதாக உள்ளதா? இல்லையே, அவர்கள் ஏன் இது போன்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளனர், வாங்கும் திறனே இல்லாத நிலைக்கு அவர்கள் மாறியது எதனால், மாற்றியது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிக அதிகமாகிவிட்ட நிலையில், இவை எல்லாவற்றிற்கும் காரணம் அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற நாட்டை மறுகாலணியாக்கும் கொள்கைகள் தாம் என்பது உறுதி.
.