Archive for the பகுக்கப்படாதது Category

ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

Posted in பகுக்கப்படாதது with tags , , , , , , on மார்ச் 19, 2012 by குட்டகொழப்பி

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

இது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

 

பாரதீய ஜ(ல்சா) பார்ட்டி

Posted in பகுக்கப்படாதது with tags , , , , , , on மார்ச் 19, 2012 by குட்டகொழப்பி

 

  ஒருமுறை ரெண்டு முறை அல்ல பல முறை கீழே விழுந்து அம்பலப்பட்டுப் போனாலும் வடிவேலு கணக்காக துடைத்துவிட்டு போகும் பெருந்தன்மை இக்கட்சியினரைத் தவிர மற்றவருக்கு குறைவே.

கர்நாடக மாநில சட்டசபையான விதான சவுதாவில் அன்றைய தினம் நடந்த விவாதத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் பற்றியும், சனவரி மாதம் சிந்தகி என்ற பகுதியில் பாகிஸ்தான் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் காலிகளைப் பற்றியும்,  கேரள அரசு போல சுற்றுலாவின் மூலம் பெரிய அளவில் கல்லாக்கட்ட  அம்மாநில அரசால் உடுப்பி மாவட்டத்தின் செயிண்ட் மேரிஸ் தீவில் நடத்திய ரேவ் பார்ட்டி  (மிதமான சத்தத்தில் புகைமூட்டத்துடன் ஆரம்பித்து, நேரம் செல்ல செல்ல வெறியூட்டக்கூடிய இரைச்சலுடன் பலான விஷயங்களும் நடக்கும் நிகழ்வு) பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அமைச்சர்களின் அக்கப்போரும் நடந்திருக்கிறது.

ரேவ் பார்ட்டியில் நடக்கும் பலான விஷயங்களை, (அதாவது பார்ட்டியில் என்னவெல்லாம் செய்வார்கள் கடைசியில் எப்படி முடியும்) பற்றி தெரிந்து கொள்ளவே  அந்த ஆபாசக்காட்சியைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.சட்டமன்றத்தில் ஆபாசக் காட்சிகள் பார்த்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்கள் முதலில் மறுத்தாலும் இறுதியில் பெருந்தன்மையாக மக்களின் விருப்பத்தின்படி ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது போன்ற புகார்கள் வருவது பாரதீய ஜல்சா பார்ட்டிக்குப் புதிதல்ல என்பது உலகறிந்ததே. எடியூரப்பாவின்  நெருங்கிய நண்பரும் முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரான ஹலப்பா, ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது தனது நண்பரான வெங்கடேசமூர்த்தியின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். இரவில் நெஞ்சு வலி வந்தபொழுது மாத்திரை வாங்கிவரச் சென்ற நண்பர் திரும்பி வருவதற்குள் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க நண்பனால் கையும் களவுமாகப் பிடிபட்டார். இறுதியில் முயற்சி வீணாகிப் போக, இலக்கையடையாமல் மனமுடைந்த ஹலப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து எடியூரப்பாவின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளரும் பல சமயங்களில் அவருக்கு ஆபத்பாந்தவனாக விளங்கிய திருவாளர் ரேணுகாச்சார்யாவின் லீலைகளும் பட்டியலிடமுடியாதவை. ஷிமோகாவில் உள்ள பாபுஜி ஆயுர்வேத மருத்துவமனையில் செவிலியாக வேலைசெய்து கொண்டிருந்த ஜெயலஷ்மிக்கும் இவருக்கும் இருந்த தொடர்பு அம்மாநில அரசியல் மட்டத்தில் அனைவருக்கும் பரிச்சயம். புதிய மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்ட பிணக்கால், இருவரும் நெருக்கமாயிருந்த புகைப்படத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் ஜெயலஷ்மி. இதைக் கண்டு சற்றும் அசராத  அவர் தன் அரசியல் பலத்தால் செய்தியை இருட்டடிப்பு செய்ய நினைக்க, இறுதியில்  சாதாரண எம்.எல்.ஏ வான அவரை  அமைச்சராக்கி அழகு பார்த்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

ஆனால் இப்பொழுதோ அமைச்சர்களை கவுரவிக்க முடியாமல் போன முதல்வர் சதானந்த கவுடாவிற்கு இக்கோழைச்ச்செயல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கூடும். போயும் போயும் எல்லாரும் பார்க்கும் ஆபாசக் காட்சியைப் பார்த்து பதவி போவதற்கு, ப்ராக்டிகலாகவே செய்து பார்த்து பதவியைக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்திருக்க்க் கூடும். தனித்துவமான கட்சி (party with difference)  என்று தங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் இவர்கள் முதன்முறையாக தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, அதைச் செய்தும் காட்டுவோம் என்று நிரூபித்துள்ளனர். இருக்காதா பின்ன, பள்ளிகளில் காமக்கதையான ராமாயணத்தை போதிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் சட்டசபையில் அதற்கான ஒத்திகையில் ஈடுபடுவதில் தவறென்ன இருக்கிறது.

ராம சேனா வானரங்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள்? காதலர் தினங்களில் லவ் ஜிகாதிகளாக மாறிவிடும் நேரங்களிலும், நள்ளிரவில் நடக்கும் ரேவ் பார்ட்டிகளிலும் இந்து கலச்சாரத்தைத் தேடிய இவர்கள், இந்து கலாச்சாரம் கிழிந்து நிர்வாணமாகி தன்னை அப்பட்டமாகிக் காட்டிக்கொண்டிருக்கும் இந்நேரம் இவர்களின் மௌனக்கலாச்சாரம் கவலையளிக்கவே செய்கிறது. ஜல்சா பார்ட்டியோ அல்லது அதன் மகளிரமைப்போ பிங்க் ஜட்டியை பரிசளிக்கலாம் என்ற பயத்தில் வானரங்கள் கைவிட்டிருக்கலாம். ஒருவேளை மும்மூர்த்திகள் பார்த்தவை சுதேசியா அல்லது விதேசியா எனக்கண்டறியும் முயற்சியில் இருக்கலாம். வெளிநாடுகளில் புகழ்பெற்ற ரேவ் பார்ட்டி பற்றித்தான் இவர்கள் அவ்வீடியோவில் ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் அவ்வீடியோ கண்டிப்பாக விதேசி வகையறாவகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி வானரங்களிடம் தெரிவிக்கவேண்டிய கடமை நமக்குள்ளது.

சட்டசபையில் ஆபாசமாகக் கத்திப்பேசுவது, நாக்கைக் கடித்துக் கொண்டுப் பேசுவது, நாற்காலியைத் தூக்கியெறிவது, காகிதத்தைக் கிழித்தெறிவது, மைக்கை உடைப்பது, ஆழ்ந்த சயனத்தில் இருப்பது, ஆளாளுக்கு அடித்துக் கொள்வது, மாறி மாறி வேஷ்டி புடவையை உருவிக்கொள்வது என எவ்வளவோ செய்தாகிவிட்டது. காலத்திற்கேற்ப பழைய  வெர்ஷன் மாறி புதிய வெர்ஷன் வேண்டுமென்பதால் ஆபாச வீடியோவில் ஆரம்பித்து இனி வரும்காலங்களில் செய்முறைத் தேர்வையும் நேரடியாக நிகழ்த்தி புதிய சரித்திரம் படைக்கலாம்.

தொடைகளுக்கிடையே மட்டும் தான் இவ்வுலகமுள்ளது என்ற  நினைப்பில் சர்வகாலமும் லயித்திருப்பதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா. இவ்வுலகத்தை அகண்ட பாரதமாக்கும் முயற்சியில் இப்பொழுது தொடைகளுக்கிடையில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். அகண்ட பாரதத்திற்கான தேடலில் சில மாற்றங்கள் வருமென்றாலும் அதைப் பெரிது படுத்தமுடியாது. போர்த்தந்திரமானாலும் செயல்தந்திரமானாலும் இறுதியில் அகண்டபாரதம் ஒன்றே இலக்காவதால் அதை எங்கு வேண்டுமானாலும் தேடலாம். ரேணுகாச்சார்யா ஜெயலஷ்மியிடமும், ஹலப்பா அவருடைய நண்பரின் மனைவியிடமும், இம்மும்மூர்த்திகள் கைப்பேசியின் பலான படங்களினூடாகவும் தேடியிருக்கின்றனர். இடமும் பொருளும் மாறினாலும் தடைகளைத்தாண்டி அகண்ட பாரதத்தையடைய எத்தனிக்கும் இவர்களின் முயற்சிகள் பாராட்டப்படக் கூடிய ஒன்றே.

கடவுளின் வேலையே அரசின் வேலை (Governments work is God’s work) என்ற முழக்கத்துடன் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் கர்நாடக சட்டமன்றக் கட்டிடமான விதான சவுதாவில் அதை நிரூபிக்கும் வகையில் ராம லீலைகளில் ஈடுபட்டு வரும் அவ்வரசின் அடிப்பொடி மந்திரிகள் மேலும் லீலைகளில் ஈடுபட்டு ராம ராஜ்ஜியத்தை அடைய எல்லாம் வல்ல அந்த ராமனை வணங்குவோம்.

சில வருடங்களுக்கு முன்பு “ யாரெல்லாம் இந்துத்வாவிற்கு எதிராகப் பேசுகிறார்களோ அவர்கள் தலை துண்டிக்கப்படும்” என ஆர்ப்பரித்த ரேணுகாசவுத்திருக்கு ஹலப்பா விஷயமும் தெரியும், மும்மூர்த்திகளின் லீலைப் பற்றியும் தெரியும். அதுசரி………!!!!!! இந்து மதத்திற்கு எதிரான இக்கலாச்சாரச் சீர்கேட்டில் ஈடுபட்ட இவர்களின் தலைமட்டும்தான் துண்டிக்கப் படவேண்டுமா…….அல்லது……??

 

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!

Posted in அடிடாஸ், உட்லான்ஸ், எலிக்கறி, கடன், கிறுக்கியது, சந்தை, தனி நபர் நுகர்வு, நச்சுக் கிழங்குகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பகுக்கப்படாதது, மறுகாலணி, மாயை, ரீபொக், ரோலக்ஸ், வாங்கும் திறன், ஹார்லி டேவிட்சன், GATT, SOCIAL ISSUES with tags , , , , on ஜனவரி 6, 2011 by குட்டகொழப்பி

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்!
நுகர்தல் இல்லையேல் சாதல்!

நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.

இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன. இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

கோக், பெப்சி போன்ற மேல்நாட்டு குளிர்பாண நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம், இந்தியா முழுக்க டீலர்கள் அமைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு வியாபாரிகளைக் கவருவதற்கு ஐஸ் பாக்ஸ், டீ சர்ட், பள பளக்கும் விளம்பரச் சுவரொட்டிகள் போன்ற ஜிகினாப் பொருள்களை இலவசமாக வழங்குவதால் கவரப்பட்டு கிராமங்களின் சாதாரணமான குக்கிராமங்களில் கூட இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோப்பு, பேஸ்ட் முதல் நாப்கின்கள் வரை டி.வி க்களில் வரும் விளம்பரங்களை வைத்து வாங்கும் நிலையே இன்று கிராமங்களில் அதிகரித்துள்ளது.

தங்கள் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும் இதற்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். முக்கியமாக இளைய தலைமுறையினரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்ற இத்தகைய விளம்பரங்கள், காலணிகள் என்றால் உட்லான்ஸ், ரீபொக் அல்லது அடிடாஸ், ஆடைகள் என்றால் ஏரோ, ஆலன் சோலி, லூயி ஃபிலிப், சோடியாக், கலர் ப்ளஸ் அல்லது க்ரொகடைல், கைக்கடிகாரங்கள் என்றால் ரோலக்ஸ், ஒமெகா அல்லது ரேடோ போன்ற தயாரிப்புகள் தான் தரமானவை என்று அவர்களை அறியாமல் மனதில் புகுத்தப்படுகின்றது. சந்தையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்துகிற இரு சக்கர வாகனங்களுக்கான கவர்ச்சிகர விளம்பரங்கள், தேவைக்குதான் வாகனங்கள் என்பதிலிருந்து பந்தா காட்டவும், படாடோபத்திற்குமான ஒரு சின்னமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களின் அறிமுகம் இதற்கு சிறந்த உதாரணம். நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் போய் ஏழு முதல் ஐம்பது லட்சம் வரையிலான ஹார்லி டேவிட்சன் வகையிறா வாகனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் அட்சய த்ரிதியை அன்று ந‌கை வாங்கினால் ந‌கை சேர்ந்து கொண்டிருக்கும் என்ற‌ மூட‌ப்ப‌ழ‌க்க‌த்தை, பார்ப்பனர்கள் மூல‌மாக‌ ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கூற‌வைத்து ம‌க்க‌ளை மேலும் வாங்குவ‌த‌ற்கான‌ ஆசையை தூண்டுவ‌தே இவ‌ர்க‌ளின் முக்கிய‌ இல‌க்காக‌ உள்ள‌து. இதன் மூல‌ம் ம‌க்க‌ளை ஓட்டாண்டியாக்குவ‌தோடு, இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் மூல‌ம் ஒரு பொருளை வாங்குவ‌தற்காக‌ கொலையும் செய்ய‌லாம் என்ப‌தைப் போன்ற மனோபாவத்தை உருவாக்குகிறது..

இது போன்று தேவைக்கு அதிகமாக‌ வாங்க‌வைத்து க‌ட‌னாளியாக்குவ‌தற்கே இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. எதுவெல்லாம் குடும்ப‌த்தை, இச்சமூகத்தை சீர‌ழிக்க‌க் கூடியதோ அதையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவதற்காக‌வே இன்றைய‌‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் காற்றை விட வேக‌மாக‌ச் சென்றுகொண்டிருக்கிற‌து. நுகர்பவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஆட்டு மந்தைகளாக மாற்றி தாங்கள் நினைத்தவற்றை சாதித்துக்கொள்ளும் வேலையை இத்தகைய விளம்பரங்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றன. மக்கள் தாங்கள் ஒரு மாதம் சம்பாதிப்பதை பெரும்பாலும் நுகர்வதற்கே அதிகபட்சமாக செலவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறுவதும், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், குழப்பம் நிலவவும் முடிவில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பிரித்துவிடும் நிலைக்கோ அல்லது தற்கொலைக்கு தூண்டும் விதத்திலோ கொண்டு போய் விடுகிறது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் போடுகிற வாசணை திரவியங்கள் அல்லது அவரால் விளம்பரப் படுத்தப்படுகிற பொருட்கள், வெளிநாடுகளில் என்று சந்தை படுத்தப் படுகின்றதோ அதே தேதியில், அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது, அது போல ஹாரி பார்ட்டர் புத்தகங்களும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்படுவதும் அப்புத்தகங்கள் அவர்களால் படிக்கப் படுகிறதோ இல்லையோ முதல் நாளே வாங்கிவிடுவது போன்றவை, மிகப்பெரிய கௌராமாகப் பார்க்கப்பட்டு, பெருமிதம் கொள்ளும் மனோபாவமும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. இதன் மூலம் உலகளவில் புகழ் பெற்ற பொருள்களை வெறி பிடித்து நுகர்வதால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் பார்ப்பதாகவும் நினைக்கிறார்கள்

1990 கள் வரையில் இந்தியாவில் இருந்த மொத்த ஷாப்பிங் மால்கள் எனப்படுகிற மிகப்பரிய வணிக வளாகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு திறந்துவிடப்பட்ட பிறகு அவற்றின் வளர்ச்சி கற்பணை செய்ய முடியாத நுகர்வுவெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், இவ்வகை நுகர்வு வெறி நமது உண்ணும் முறையிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய மால்களில் உள்ள மெக் டொனால்ட், கெ.எஃப்.சி, சான்ஸ் கிட்சென், வேன்க்ஸ் கிட்சென், பீசா ஹட், பதான்கோட், காஃபி டே போன்ற மேல்தட்டு உணவகங்கள் வானொலி, தொலைகாட்சிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் வெறியை ஏற்படுத்துகிறது.

தனி நபர் நுகர்வு வெறிக்கு மூலம், இந்திய அரசால் 1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மய, தாராளமய உலகமய சித்தாந்தத்தைக் கொண்ட காட் (GATT) ஒப்பந்தமே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய சந்தை, எதை சொன்னாலும் நம்பக் கூடிய அடிமை புத்தி கொண்ட மக்கள், வெளி நாட்டுப் பொருள்கள் என்றால் தரம் அதிகமாக இருக்கும் என்ற கற்பிதங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான தொழில் நுட்பத்தையும் தொழில்நுட்ப சாதனங்களையும் இன்னபிற கண்ட கண்ட கழிசடைகளைக் கூட மூன்றாம் உலக நாடுகளில் விற்று காசாக்கலாம் என்ற ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் போன்றவை தங்கள் சமஸ்தான சந்தைகளை அமைக்க சாதக அம்சங்களாக மேலை நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இது போன்ற தனி நபர் நுகர்வை சமூகத்தில் ஒரு கவுரவமான செயலாகவும் அதிகமாக நுகர்பவனை மதிப்பு மிக்கவனாகவும் இச்சமூகமும் முதலாளித்துவ உலகமும் காட்டமுனைகிறது. அதிகமாக நுகர்தலே நிம்மதி, அதிகமாக நுகர்வதே பெருமையான விஷயம், புதிது புதிதாக வித விதமாக நுகர்தல், போன்றவை நுகர்தலை போதை வஸ்துவாகவே மாற்றி ஒருவித மயக்க நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.

இது ஏதோ மிகப் பெரிய சமுதாயப் பொருளாதார புரட்சி என்றும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது, யாரும் முன்னைப் போல பரம ஏழைகளாக இல்லை என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் இது போன்ற சந்தைகள் யாருக்கானதாக இருக்கிறது, யார் நுகர்வதற்காக வந்துள்ளது ? இது தினம் தினம் பட்டினியால் செத்து மடியும், நோஞ்சான்களாக இருக்கும் இந்தியக் குழந்தைகளின் பட்டினியை போக்குவதாக இருக்கிறதா? எலிக்கறி, நச்சுக் கிழங்குகள் தின்று தங்கள் பசியை ஆற்றிக்கொள்ளும் விவசாயிகளின் பட்டினியினைப் போக்குவதாக உள்ளதா? மக்கள் தொகையில் 30 கோடி பேர் தினமும் உறங்கச் செல்லும் முன் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ளும் ஏழைப் பாழைகளின் பசியை போக்குவதாக உள்ளதா? இல்லையே, அவர்கள் ஏன் இது போன்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளனர், வாங்கும் திறனே இல்லாத நிலைக்கு அவர்கள் மாறியது எதனால், மாற்றியது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிக அதிகமாகிவிட்ட நிலையில், இவை எல்லாவற்றிற்கும் காரணம் அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற நாட்டை மறுகாலணியாக்கும் கொள்கைகள் தாம் என்பது உறுதி.
.

Culture Unplugged Video

Posted in பகுக்கப்படாதது on ஓகஸ்ட் 30, 2010 by குட்டகொழப்பி

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை….ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

Posted in பகுக்கப்படாதது with tags , , , on ஓகஸ்ட் 11, 2010 by குட்டகொழப்பி

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.
தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
போபால் சிறப்பு வெளியீடு

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!!

Posted in கிறுக்கியது, சத்தீஸ்கர், சிரியா மோகன், தெகல்கா, பகுக்கப்படாதது, படித்ததில் பிடித்தது, மொழி பெயர்ப்பு, விதர்பா, விமர்சனங்கள், விவசாயிகள் தற்கொலை, NCRB, SOCIAL ISSUES on ஜூன் 14, 2010 by குட்டகொழப்பி

விதர்பாவின் விவசாயிகள் தற்கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவமாகும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் பிணக்காடாகிக்கொண்டிருப்பது நாம் அறியாதவை.

தெகல்காவில் சிரியா மோகன் எழுதிய நிதர்சனக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

சத்தீஸ்கர் என்றாலே நக்சல்பரிகள் நிறைந்த இடம் என்று எல்லோராலும் பேசக்கூடிய நிலை, ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து வருடங்களாக அங்கு விவசாயிகளின் தற்கொலை விதர்பாவை விட மோசமான நிலைமைக்கு வந்திருப்பது மிகக்கவனமாக மறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள், மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் தற்கொலையிலும் மூன்றில் ஒன்றாக இருப்பது அதிர்ச்சிக்குறியது. கடந்த 1997 முதல் 2007 வரை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் த்ற்கொலை எண்ணிக்கை 1,82,936 என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசியக்குற்றப்புலனாய்வுப் பதிவின் (NCRB) அறிக்கை பதிவு செய்கிறது.

2001 சத்தீஸ்கர் தனிமாநிலமாகப் பிரிந்து வந்த பொழுது, அதே ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 1452 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது விதர்பாவின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அதாவது ஒரு இலட்சத்தில் 7 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், அதே சமயம் மகாராஷ்டிரத்தில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. இதைவிட மிகச்சரியாகக் கூறவேண்டுமானால் 1.5 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சுடுகாட்டுத் தலைநகரமான விதர்பாவின் அளவும் சத்தீஸ்கரின் அளவும் ஏறக்குறைய ஓன்றுதான். இதுவரை எடுத்துள்ளக் கணக்கெடுப்பின்படி விதர்பாவில் மிக அதிகபட்சமாக 2006-ல் 1065 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் சத்தீஸ்கரிலோ 2006-ல் 1483-ஆக இருந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1593 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் விதர்பாவின் உண்மை செய்தி ஊடகங்களில் வந்ததைப்போல் அல்லாமல் சத்தீஸ்கர் பற்றிய செய்திகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலையை மொத்த மக்கள் தொகை சதவீதக்கணக்கில் ஆராய்ந்தால் கடந்த ஆறு ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் இருப்பது மிக பயங்கரமான செய்தியாகும்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை சராசரியாக ஒரு லட்சத்திற்கு 14 பேர். அதில் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் மட்டும் இந்தக் கொடூரம் 83 ஆக இருக்கிறது.

இதன் காரணமாக சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களைக் கண்டுபிடிப்பதே ஒரு புதிராக இருந்தது.மகாசமுந்தில் உள்ள கோதாவரிகிராமத்தில் சந்தோஷ் நிஷாத்தின் வீடு இருளாகவும் காலியாகவும் இருந்தது.ஆனால் பாதி பக்கவாதததால் பாதிக்கப்பட்ட நிஷாத்தின் அப்பா பகதூர் சிங் மட்டும் இருந்தார். கூலி வேலைக்குச் சென்ற நிஷாத்தின் மனைவியும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.மூன்று குழந்தைகளும் கூட தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள தினக் கூலியாகச் சென்றிருப்பது தெரியவந்தது.நிஷாத் ஒரு வருடத்திற்க்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரின் சாவுக்கான காரணத்தை தந்தையிடம் கேட்டபொழுது “மொதல்ல எங்கள நிம்மதியா இருக்க விடுறீங்களா, என் அருமை மவன் எதுக்கு செத்தான்னு எனக்கு என்ன தெரியும், அவன் மண்டையில இருந்தது பற்றி எனக்கு எப்படி தெரியும்”என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார். மேலும் “இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரண உதவியும் வரல, எங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது, வறுமைக்கோட்டிற்க்கு கீழன்னு சொல்கிற அடையாள அட்டை கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பச்ச வயிரை நிறைக்க நாயா அலைகிறோம், உங்ககிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எதுக்காக உங்ககிட்ட பேசனும்” என்று தனது கோபத்தை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த கோபம் சரியானது, மிக வலிமையானது, கூர்மையானது என்பது தெளிவாகத் கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது முக்கால் வாசி நிலங்களைத் தனது தந்தையின் சிகிச்சைக்காக விற்றார், ஆனால் இன்றோ அரை ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. குடும்பத்தில் விசாரித்த பொழுது அவர் யாரிடமும் கடனாளியாகக் கூட இல்லை என்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ,விவசாயத்தில் எதுவும் ஈட்ட முடியாத நிலையைக் கூறும்போதுதான் அவரின் சாவுக்கு காரணம் எது அன்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவரின் சாவையும் , விவசாயியின் தற்கொலை என்று பதிவு செய்யாமல் பொருளாதரக் காரணம் என்று காவல் நிலையம் பதிவு செய்து உண்மைக்காரணத்தை மூடி மறைத்துள்ளது.

பத்திரிக்கையாளர் சாய்நாத் தனது கட்டுரையில் விவசாயிகளின் சாவைக் கனக்கெடுப்பதில் அரசு மிகுந்த அளவில் தள்ளுபடி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதாரனமாக பெண் விவசயிகளின் தற்கொலையை விவசாயிகள் பட்டியளில் சேர்க்காமல் அவர்கள் விவசாயியின் மனைவி என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். (காலங்காலமாக நிலங்கள் பெண்களின் கைகளில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.) இதனால் எண்ணிலடங்கா பெண் விவசாயிகளின் தற்கொலை இந்தக் கணகெடுப்பின் போது நிராகடிக்கப்படுகிறது. மேலும் நிலங்கள் விவசாயியின் உறவினர்கள் பெயரில் இருந்ததாலும், குத்தைகைக்கு எடுத்திருந்ததாலும் பரிசீலிக்கப்படுவதில்லை.
சத்தீஸ்கரில் உள்ள விவசாய விஞ்ஞானியான சன்கெத் தாகூர் இதற்கான மூலகாரண்ம் பாசனம் பொய்த்து போனதே என்று கூறுகிறார். நெற்பயிரே மூலப்பயிராக இருக்கும் சத்தீஸ்கரில் உள்ள நிலங்களில் நான்கில் ஒன்று என்ற அளவில்தான் பாசனவசதி இருக்கிறது என்கிறார்.

மொத்த விவசாயிகளில் 75 சதவீதம் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் சிறு விவசாயிளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும் பருவ மழை பொய்த்ததாலும்,உரங்கள் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகளின் விலை உயர்வும் அவர்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுறக் கூறுகிறார்.அதனால் “குறைந்த மகசூலே தலையெழுத்து” என்று கூறி விவ்சாயிகள் தங்களது விதியை நொந்துகொள்வதாகக் கூறுகிறார்.ஒரு ஏக்கருக்கு 24 குவிண்டால் நெற்பயிரைக் கொடுக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் காட்டிலும், 6 குவிண்டால் விலைந்தாலே போதும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகக் கூறுகிறார்.

மகாசமுந்தில் உள்ள எஸ்.பி யான ஆனந்த் சாப்ரே ” எங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தற்கொலைகள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அதை விவசாயிகள் தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத் திட்டக்கமிசன் துணைத் தலைவரும் கோபத்துடன் ” விவசாயிகள் எதற்கு தற்கொலை செஞ்சுக்கனும், இங்க எல்லாமே அளவுக்கு மீறி வெளையுது, கெடக்குது அப்புறம் எதற்கு தற்கொலை? அதுவுமில்லாம சத்தீஸ்கர்ல ஒரு விவசாயி கூட கடனாளி கிடையாது.” என்று கூறுகிறார்.
ஆனால் N.C.R.B-யின் கணக்கெடுப்பினைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறிய போது ” இந்த கணக்கெடுப்பு யார்கிட்ட இருந்து எடுத்தாங்கன்னு தெரியல, ஒருவேளை தவறான நபர்களிடம் இருந்து கூட எடுத்திருக்கலாம். எங்களிடம் வந்து விசாரிங்க, நாங்க உண்மையான செய்தி தருகிறோம்,அப்ப உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று சொன்னார். மேலும் உலகத்துக்கே அரிசியும், பருப்பும் கொடுக்கிற நாங்க எதுக்கு தற்கொலை செய்யனும் என்று பெருமிததுடன் கூறி முடித்தார்.2006ம் ஆண்டு விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1065,ஆனால் சத்தீஸ்கரிலோ அதன் எண்ணிக்கை 1483 ஆக இருக்கிறது.

இத்தகைய கொடூரமான சாவினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில விவ்சாயக் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் மகாசமுந்தில் உள்ள ஒரு விவசாயியின் சராசரி வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்குடன் பாக்ரா என்ற இடத்தில் உள்ள 40 வயதான சத்ருகன், அவரின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்தோம். ஏழு ஏக்கர் மதிபுள்ள அவரின் நிலத்தில் அரிசி மற்றும் உளுந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தான் தன் மூத்த மகளின் திருமணத்தையொட்டி 3 ஏக்கர் நிலத்தை 2.5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்,அதனால் தற்பொழுது அவர்கள் விளைவிப்பது தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே போதுமானதாக இருப்பதால்
வேறு எதையும் விற்கமுடிவதில்லை, மேலும் தற்பொழுது அவர்களால் சந்தைகளில் விற்கும் எந்தப் பருப்பையும் வாங்க முடிவதில்லை. இதுபோக சத்ருஹனுக்கு மேலும் 4 மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறது, இதற்காக மீதி இருக்கும் நிலங்களையும் விற்றால் குடும்பைதின் எதிர்காலம் கேள்விகுறிதான். சத்ருஹனின் இதே நிலைதான் அங்கு இருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையும், இதனால் இவர்கள் ஊட்டசத்து இல்லாமல் நோஞ்சான் களாக மாறிவருகிறார்கள்.

பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் பகிரத்தின் வாழ்நிலையை விசாரித்ததில் அது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. காலங்காலமாக விவசாய நிலமேதும் இல்லாததால் இவரின் குடும்பம் 40 ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாக விவசாய நிலங்களிலும், கட்டுமானத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தற்பொழுது தனது மகளின் கல்யாணத்திற்காக 50000 ரூபாய் கடணாகப் பெற்றுள்ளார். முழுமையாக ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கூடத் தாண்ட முடியாத நிலையில் 50000 ரூபாய் மொத்தமாக தர யாரும் முன்வரவில்லை, அதனால் கொசுறு கொசுறாக 5 பைசா வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறினார். மேலும் வருமானத்திற்காக இரண்டு ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்துள்ள அவர், விளைவதில் எட்டு குவின்டாலை வாடகையாகக் கொடுத்து விடுகிறார், மீதியை தான் தன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமானதாக இருப்பதில்லை. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர் வாடகையாகவோ, பணமாகவோ அல்லது தாணியமாகவோ எதிர்வரும் காலங்களில் சேர்த்துக்கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒருவருடம் சம்பாதிக்கும் தொகை வட்டியைச் செலுத்தவே சரியாக இருப்பதால் இவர்கள் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அடுத்தவருடம் புதிதாகக் கடன் கொடுப்பவர் மாறுவார். ஆனால் வட்டியாகக் கொடுக்கும் பணத்தின் மதிப்பும், வாழ்நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

மஹாசமுந்த் மாவட்டம் முழுக்க விவசாயிகளின் நிலை இதுதான். பண்ணையார்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், தங்கள் நிலங்களை விவசாயிகளிடம் குத்தகையாகக் கொடுக்கின்றனர். வியர்வையே சிந்தாத இவர்கள், இரத்தத்தையே வியர்வையாக சிந்தும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது கண்கூடாகத் தெரிகிறது.

ஆண்டாண்டுகளாக ஆயிரமாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து பிணக்குழியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரகசிய உடன்படிக்கைப் போல இந்த விஷயம் வெளியுலகிற்க்குத் தெரியாததன் காரணத்தைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முதலாவதாக உள்ளூர் ஊடகங்கள், இத்தகைய செய்திகளால் எத்தகைய பலனும் பெறாத நிலையில் இருப்பதால் அவற்றை வெளியிடத் தயார் நிலையில் இல்லை”, “இரண்டாவதாக பத்தி ரிக்கையாளர்களோ மாநிலத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைப் பற்றிச் சொல்ல ஊக்கப்படுத்தப்படுவதில்லை”, “கடைசியாக விதர்பாவில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் மற்றும் போராடும் இயக்கமான விதர்பா சேட்கரி சங்கதன் போல ஒரு வலுமையான இயக்கம் இங்கு இல்லாதது பெரும் பின்னடைவுக்குக் காரணம்.”

2008-ல் கணக்கெடுப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில், இதைப்பற்றி மாநில அரசு கவனிக்காவிடில் இந்நிலை மேலும் உயர்ந்து மாநிலமே மிக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் N.C.R.B -வின் குழு வருத்தப்பட்டுச்சொல்கிறது.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!! என்கிற பாப் டைலனின் பாடல் சத்தீஸ்கருக்கு மிகவும் பொருந்தும்.