Archive for the விமர்சனங்கள் Category

எங்களுக்காகப் பேசு இல்லையென்றால் நீ மாவோயிஸ்டு !!!

Posted in உள்நாட்டுப் போர், சத்தீஸ்கர், பழங்குடி மக்கள், போலிஸ் அராஜகம், மாவோயிஸ்டு, லால்கர், விமர்சனங்கள், SOCIAL ISSUES with tags , , , , , on ஜூலை 18, 2010 by குட்டகொழப்பி

இந்திய ஆளும் வர்க்கத்தினால் திட்டமிடப்பட்டு நடந்து வருகின்ற காட்டு வேட்டையினால் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாகச் சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தடையற்றஅடக்குமுறை அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ் நிøயை முள்வேலிக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கிணையாக மாற்றியுள்ளது.

அரசின் அடக்கு முறையினால் நிலையற்று நாடோடிகளைப் போல மாறிய அம்மக்கள் காலங்காலமாக பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் ஈட்டி, அம்பு போன்ற சாதாரண ஆயுதங்களை மிகப் பயங்கரமான ஆயுதங்களாகச் சித்தரித்து தீவிரவாதிகளாக அடையாளப் படுத்துகிற அவல நிலையும் இங்கு சர்வ சாதாரணமாகியுள்ளது.இந்தியா முழுக்க போலிசு என்பது அரசின் அடக்குமுறைக் கருவியாக மாறியுள்ள நிலையில் லால்கர், ஒரிஸ்ஸா,சத்தீஸ்கர் போன்ற இடங்களில் இதன் வீரியம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.எந்தவித முகாந்திரமுமின்றி போலிசுக் கும்பலால் கைது செய்யப்படும் அவர்கள் அளவிலாச் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு செத்து மடியும் நிலையும் இங்கு சாதாரணமே.

குறிப்பாக லால்கரில் உள்ள மிட்னாப்பூரில் போலீசுக் கும்பலின் எல்லையற்ற அதிகாரம் அம்மக்களின் அடிப்படை உரிமையையே பறிக்கும் நிலையில் உள்ளது.
பிரக்கடாவில் 2009 டிசம்பரில் நடந்த குண்டு வெடிப்பில் போலிசு வாகனம் மாவோயிஸ்டுகளால் தரைமட்டமாக்கப்பட்டது.குன்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவே உள்ளது சுனில் மஹட்டோ என்ற பழங்குடியினரின் வீடு.தன்னைச் சந்தேகப்படுவார்களோ என பயந்த சுனில் அருகில் இருக்கும் காட்டில் அடைக்கலமடைந்தார்.சுனில் நினைத்தது பொன்றே சந்தேகப்பட்ட போலீஸ் வீட்டில் இருந்த அவரின் மனைவி திவாலி மற்றும் குழந்தைகளையும் சிறையிலடைத்தது.

சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த சுனில் நடந்த செய்தியறிந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத சுனில் மீதோ அரசுக் கெதிராகச் சதிச் செயலில் ஈடுபட்டமை, பயங்கர ஆயுதம் மற்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தமை போன்ற ஏழு குற்றங்களில் திணிக்கப்ட்டு சிறைத்தண்டனை விதிக்கபட்டது. தெற்கு மிட்னாபுரில் உள்ள சிறையில் சுனிலைப் போன்றே கிட்டதட்ட 141 க்கும் மேற்பட்ட பழங்குடி ஆண்களும் பெண்களும் மாவோயிஸ்டுகளெனப் பொய் குற்றம் சுமத்தப் பட்டு அடைக்கப்பட்டனர்.காடுகளின் அருகில் இவர்கள் வீடு இருப்பதாலேயே தாங்கள் மாவோயிஸ்டுகளெனச் சித்தரிக்கபடுவதாக இம்மக்கள் கூறுகின்றனர்.

இந்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாகச் செயல்பட்டு வரும் இந்த அரசு நக்சல் புரட்சியாளர்களை கொன்றொழிப்பதாகக் கூறி தன் மக்கள் மீதே உள் நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இப்பாசிசத்தை அம்பலப் படுத்த வேண்டியது நம் அனைவரின் மிக முக்கியமான கடமையாகும்.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!!

Posted in கிறுக்கியது, சத்தீஸ்கர், சிரியா மோகன், தெகல்கா, பகுக்கப்படாதது, படித்ததில் பிடித்தது, மொழி பெயர்ப்பு, விதர்பா, விமர்சனங்கள், விவசாயிகள் தற்கொலை, NCRB, SOCIAL ISSUES on ஜூன் 14, 2010 by குட்டகொழப்பி

விதர்பாவின் விவசாயிகள் தற்கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவமாகும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் பிணக்காடாகிக்கொண்டிருப்பது நாம் அறியாதவை.

தெகல்காவில் சிரியா மோகன் எழுதிய நிதர்சனக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

சத்தீஸ்கர் என்றாலே நக்சல்பரிகள் நிறைந்த இடம் என்று எல்லோராலும் பேசக்கூடிய நிலை, ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து வருடங்களாக அங்கு விவசாயிகளின் தற்கொலை விதர்பாவை விட மோசமான நிலைமைக்கு வந்திருப்பது மிகக்கவனமாக மறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள், மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் தற்கொலையிலும் மூன்றில் ஒன்றாக இருப்பது அதிர்ச்சிக்குறியது. கடந்த 1997 முதல் 2007 வரை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் த்ற்கொலை எண்ணிக்கை 1,82,936 என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசியக்குற்றப்புலனாய்வுப் பதிவின் (NCRB) அறிக்கை பதிவு செய்கிறது.

2001 சத்தீஸ்கர் தனிமாநிலமாகப் பிரிந்து வந்த பொழுது, அதே ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 1452 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது விதர்பாவின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அதாவது ஒரு இலட்சத்தில் 7 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், அதே சமயம் மகாராஷ்டிரத்தில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. இதைவிட மிகச்சரியாகக் கூறவேண்டுமானால் 1.5 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சுடுகாட்டுத் தலைநகரமான விதர்பாவின் அளவும் சத்தீஸ்கரின் அளவும் ஏறக்குறைய ஓன்றுதான். இதுவரை எடுத்துள்ளக் கணக்கெடுப்பின்படி விதர்பாவில் மிக அதிகபட்சமாக 2006-ல் 1065 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் சத்தீஸ்கரிலோ 2006-ல் 1483-ஆக இருந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1593 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் விதர்பாவின் உண்மை செய்தி ஊடகங்களில் வந்ததைப்போல் அல்லாமல் சத்தீஸ்கர் பற்றிய செய்திகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலையை மொத்த மக்கள் தொகை சதவீதக்கணக்கில் ஆராய்ந்தால் கடந்த ஆறு ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் இருப்பது மிக பயங்கரமான செய்தியாகும்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை சராசரியாக ஒரு லட்சத்திற்கு 14 பேர். அதில் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் மட்டும் இந்தக் கொடூரம் 83 ஆக இருக்கிறது.

இதன் காரணமாக சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களைக் கண்டுபிடிப்பதே ஒரு புதிராக இருந்தது.மகாசமுந்தில் உள்ள கோதாவரிகிராமத்தில் சந்தோஷ் நிஷாத்தின் வீடு இருளாகவும் காலியாகவும் இருந்தது.ஆனால் பாதி பக்கவாதததால் பாதிக்கப்பட்ட நிஷாத்தின் அப்பா பகதூர் சிங் மட்டும் இருந்தார். கூலி வேலைக்குச் சென்ற நிஷாத்தின் மனைவியும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.மூன்று குழந்தைகளும் கூட தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள தினக் கூலியாகச் சென்றிருப்பது தெரியவந்தது.நிஷாத் ஒரு வருடத்திற்க்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரின் சாவுக்கான காரணத்தை தந்தையிடம் கேட்டபொழுது “மொதல்ல எங்கள நிம்மதியா இருக்க விடுறீங்களா, என் அருமை மவன் எதுக்கு செத்தான்னு எனக்கு என்ன தெரியும், அவன் மண்டையில இருந்தது பற்றி எனக்கு எப்படி தெரியும்”என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார். மேலும் “இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரண உதவியும் வரல, எங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது, வறுமைக்கோட்டிற்க்கு கீழன்னு சொல்கிற அடையாள அட்டை கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பச்ச வயிரை நிறைக்க நாயா அலைகிறோம், உங்ககிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எதுக்காக உங்ககிட்ட பேசனும்” என்று தனது கோபத்தை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த கோபம் சரியானது, மிக வலிமையானது, கூர்மையானது என்பது தெளிவாகத் கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது முக்கால் வாசி நிலங்களைத் தனது தந்தையின் சிகிச்சைக்காக விற்றார், ஆனால் இன்றோ அரை ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. குடும்பத்தில் விசாரித்த பொழுது அவர் யாரிடமும் கடனாளியாகக் கூட இல்லை என்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ,விவசாயத்தில் எதுவும் ஈட்ட முடியாத நிலையைக் கூறும்போதுதான் அவரின் சாவுக்கு காரணம் எது அன்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவரின் சாவையும் , விவசாயியின் தற்கொலை என்று பதிவு செய்யாமல் பொருளாதரக் காரணம் என்று காவல் நிலையம் பதிவு செய்து உண்மைக்காரணத்தை மூடி மறைத்துள்ளது.

பத்திரிக்கையாளர் சாய்நாத் தனது கட்டுரையில் விவசாயிகளின் சாவைக் கனக்கெடுப்பதில் அரசு மிகுந்த அளவில் தள்ளுபடி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதாரனமாக பெண் விவசயிகளின் தற்கொலையை விவசாயிகள் பட்டியளில் சேர்க்காமல் அவர்கள் விவசாயியின் மனைவி என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். (காலங்காலமாக நிலங்கள் பெண்களின் கைகளில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.) இதனால் எண்ணிலடங்கா பெண் விவசாயிகளின் தற்கொலை இந்தக் கணகெடுப்பின் போது நிராகடிக்கப்படுகிறது. மேலும் நிலங்கள் விவசாயியின் உறவினர்கள் பெயரில் இருந்ததாலும், குத்தைகைக்கு எடுத்திருந்ததாலும் பரிசீலிக்கப்படுவதில்லை.
சத்தீஸ்கரில் உள்ள விவசாய விஞ்ஞானியான சன்கெத் தாகூர் இதற்கான மூலகாரண்ம் பாசனம் பொய்த்து போனதே என்று கூறுகிறார். நெற்பயிரே மூலப்பயிராக இருக்கும் சத்தீஸ்கரில் உள்ள நிலங்களில் நான்கில் ஒன்று என்ற அளவில்தான் பாசனவசதி இருக்கிறது என்கிறார்.

மொத்த விவசாயிகளில் 75 சதவீதம் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் சிறு விவசாயிளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும் பருவ மழை பொய்த்ததாலும்,உரங்கள் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகளின் விலை உயர்வும் அவர்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுறக் கூறுகிறார்.அதனால் “குறைந்த மகசூலே தலையெழுத்து” என்று கூறி விவ்சாயிகள் தங்களது விதியை நொந்துகொள்வதாகக் கூறுகிறார்.ஒரு ஏக்கருக்கு 24 குவிண்டால் நெற்பயிரைக் கொடுக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் காட்டிலும், 6 குவிண்டால் விலைந்தாலே போதும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகக் கூறுகிறார்.

மகாசமுந்தில் உள்ள எஸ்.பி யான ஆனந்த் சாப்ரே ” எங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தற்கொலைகள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அதை விவசாயிகள் தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத் திட்டக்கமிசன் துணைத் தலைவரும் கோபத்துடன் ” விவசாயிகள் எதற்கு தற்கொலை செஞ்சுக்கனும், இங்க எல்லாமே அளவுக்கு மீறி வெளையுது, கெடக்குது அப்புறம் எதற்கு தற்கொலை? அதுவுமில்லாம சத்தீஸ்கர்ல ஒரு விவசாயி கூட கடனாளி கிடையாது.” என்று கூறுகிறார்.
ஆனால் N.C.R.B-யின் கணக்கெடுப்பினைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறிய போது ” இந்த கணக்கெடுப்பு யார்கிட்ட இருந்து எடுத்தாங்கன்னு தெரியல, ஒருவேளை தவறான நபர்களிடம் இருந்து கூட எடுத்திருக்கலாம். எங்களிடம் வந்து விசாரிங்க, நாங்க உண்மையான செய்தி தருகிறோம்,அப்ப உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று சொன்னார். மேலும் உலகத்துக்கே அரிசியும், பருப்பும் கொடுக்கிற நாங்க எதுக்கு தற்கொலை செய்யனும் என்று பெருமிததுடன் கூறி முடித்தார்.2006ம் ஆண்டு விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1065,ஆனால் சத்தீஸ்கரிலோ அதன் எண்ணிக்கை 1483 ஆக இருக்கிறது.

இத்தகைய கொடூரமான சாவினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில விவ்சாயக் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் மகாசமுந்தில் உள்ள ஒரு விவசாயியின் சராசரி வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்குடன் பாக்ரா என்ற இடத்தில் உள்ள 40 வயதான சத்ருகன், அவரின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்தோம். ஏழு ஏக்கர் மதிபுள்ள அவரின் நிலத்தில் அரிசி மற்றும் உளுந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தான் தன் மூத்த மகளின் திருமணத்தையொட்டி 3 ஏக்கர் நிலத்தை 2.5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்,அதனால் தற்பொழுது அவர்கள் விளைவிப்பது தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே போதுமானதாக இருப்பதால்
வேறு எதையும் விற்கமுடிவதில்லை, மேலும் தற்பொழுது அவர்களால் சந்தைகளில் விற்கும் எந்தப் பருப்பையும் வாங்க முடிவதில்லை. இதுபோக சத்ருஹனுக்கு மேலும் 4 மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறது, இதற்காக மீதி இருக்கும் நிலங்களையும் விற்றால் குடும்பைதின் எதிர்காலம் கேள்விகுறிதான். சத்ருஹனின் இதே நிலைதான் அங்கு இருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையும், இதனால் இவர்கள் ஊட்டசத்து இல்லாமல் நோஞ்சான் களாக மாறிவருகிறார்கள்.

பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் பகிரத்தின் வாழ்நிலையை விசாரித்ததில் அது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. காலங்காலமாக விவசாய நிலமேதும் இல்லாததால் இவரின் குடும்பம் 40 ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாக விவசாய நிலங்களிலும், கட்டுமானத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தற்பொழுது தனது மகளின் கல்யாணத்திற்காக 50000 ரூபாய் கடணாகப் பெற்றுள்ளார். முழுமையாக ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கூடத் தாண்ட முடியாத நிலையில் 50000 ரூபாய் மொத்தமாக தர யாரும் முன்வரவில்லை, அதனால் கொசுறு கொசுறாக 5 பைசா வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறினார். மேலும் வருமானத்திற்காக இரண்டு ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்துள்ள அவர், விளைவதில் எட்டு குவின்டாலை வாடகையாகக் கொடுத்து விடுகிறார், மீதியை தான் தன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமானதாக இருப்பதில்லை. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர் வாடகையாகவோ, பணமாகவோ அல்லது தாணியமாகவோ எதிர்வரும் காலங்களில் சேர்த்துக்கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒருவருடம் சம்பாதிக்கும் தொகை வட்டியைச் செலுத்தவே சரியாக இருப்பதால் இவர்கள் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அடுத்தவருடம் புதிதாகக் கடன் கொடுப்பவர் மாறுவார். ஆனால் வட்டியாகக் கொடுக்கும் பணத்தின் மதிப்பும், வாழ்நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

மஹாசமுந்த் மாவட்டம் முழுக்க விவசாயிகளின் நிலை இதுதான். பண்ணையார்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், தங்கள் நிலங்களை விவசாயிகளிடம் குத்தகையாகக் கொடுக்கின்றனர். வியர்வையே சிந்தாத இவர்கள், இரத்தத்தையே வியர்வையாக சிந்தும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது கண்கூடாகத் தெரிகிறது.

ஆண்டாண்டுகளாக ஆயிரமாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து பிணக்குழியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரகசிய உடன்படிக்கைப் போல இந்த விஷயம் வெளியுலகிற்க்குத் தெரியாததன் காரணத்தைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முதலாவதாக உள்ளூர் ஊடகங்கள், இத்தகைய செய்திகளால் எத்தகைய பலனும் பெறாத நிலையில் இருப்பதால் அவற்றை வெளியிடத் தயார் நிலையில் இல்லை”, “இரண்டாவதாக பத்தி ரிக்கையாளர்களோ மாநிலத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைப் பற்றிச் சொல்ல ஊக்கப்படுத்தப்படுவதில்லை”, “கடைசியாக விதர்பாவில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் மற்றும் போராடும் இயக்கமான விதர்பா சேட்கரி சங்கதன் போல ஒரு வலுமையான இயக்கம் இங்கு இல்லாதது பெரும் பின்னடைவுக்குக் காரணம்.”

2008-ல் கணக்கெடுப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில், இதைப்பற்றி மாநில அரசு கவனிக்காவிடில் இந்நிலை மேலும் உயர்ந்து மாநிலமே மிக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் N.C.R.B -வின் குழு வருத்தப்பட்டுச்சொல்கிறது.

இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!! என்கிற பாப் டைலனின் பாடல் சத்தீஸ்கருக்கு மிகவும் பொருந்தும்.

கோபாலபுரத்துக் கோமானும் கோயில் மாடுகளும்-இரா.செந்தில்குமார்

Posted in இரா.செந்தில்குமார், ஈழம், கருணாநிதி, கீற்று. காம், குடும்ப அரசியல், தி. மு. க, படித்ததில் பிடித்தது, விமர்சனங்கள், SOCIAL ISSUES with tags on பிப்ரவரி 26, 2009 by குட்டகொழப்பி

karunanidhi_familyஅன்புள்ள மு.க.அ, மு.க.ஸ், மு.க.க, மு.க.அ.க, மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், முத்துவேலர் கருணாநிதி கனிமொழி, முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழி, முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்…… அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே….. எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியுதுங்க தலைவரே. இந்த மட ஜென்மங்ககிட்ட அதுக்கான அர்த்தம் அதில்ல, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியோட சுருக்கந்தா தி.மு.க.ன்னா ஒத்துக்கவே மாட்டேங்குறாங்க தலைவரே. நீங்களே செல்லுங்க! நீங்கதான தி.மு.க., தி.மு.க.ன்னா நீங்க தானே.

கட்சி பேரச் சொல்லி கண்டதையும் சொல்லி கடைசில, எழுத வந்ததை அப்படியே கோட்டவிட்டுவேன் போல இருக்குது தலைவரே. அதென்னமோ தெரியல, என்ன மாயமோ புரியலை நீங்க பேசுனா எல்லாரும் கொளம்பிப் போகற மாதிரி எனக்கும் உங்களுக்கு எழுதனும்ன்னு பேனா எடுத்தொடனே எல்லாமே கொளம்பிப் போச்சுங்க தலைவரே. சரி, நேரா விசயத்துக்கே வர்றனுங்க.

 

எனக்கு வீட்டுல ரெண்டு வாரமா எம்புள்ளயாள ஒரே பிரச்சனை தலைவரே. அதனால வேலவெட்டிக்குப் போகமுடியல, மனசு நிம்மதியா இல்ல. அப்பத்தான் உங்கள நெனச்சிட்டேன். ஒரே புள்ள, ஒரே பிரச்சனைய வெச்சிட்டு ஒரே வேலைக்குப் போற என்னாலயே ஒழுங்கா வேலை பாக்க முடியலேயே. உங்க நெலமயெல்லாம் அய்யய்யோ…. பாவந்தான் தலைவரே, இருந்தாலும் எம்பிரச்சனையை நீங்க தீத்து வெப்பீங்கன்னுதான் இந்த லெட்டரே எழுதுறேன். புள்ளைங்க பஞ்சாயத்து பாத்துப் பாத்து பழகிப்போன அனுபவஸ்தர் நீங்க. உங்ககிட்ட சொன்னா நிச்சயமா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இது ஈழப் பிரச்சனையில்ல கண்டுக்காம ஆஸ்பத்திரியில படுத்துக்க. புள்ளைங்க பிரச்சனை! அதுனால ஒரு தகப்பனா என் உணர்வை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேன். சமீப காலமா நீங்க ஒரு நல்ல தலைவரா இருக்கறத விட நல்ல தகப்பனா இருக்கிறதப் பாத்துட்டு ஊருல உள்ள கண்ணெல்லாம் உங்கமேல பட்டுருச்சு. அதனாலதான் இந்த முதுகுவலி, மூட்டுவலியெல்லான்னு நெனைக்கிறேன். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க தலைவரே.

 

பாத்தீங்களா! மறுபடியும் நான் என் பிரச்சனையை மறந்துட்டேன். பிரச்சனை என்னன்னா ‘என்னோட அஞ்சு வயசு மவ தெனம் ராத்திரில தூங்கும்போது ஒன்னுக்குப் போயிடறா தலைவரே. வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட சிக்கலுக்கு இந்த ஒரு பிரச்சனை தான் மூலகாரணம்னா உங்களால நம்பமுடியுதுங்களா தலைவரே! சரி விசயத்தைக் கொஞ்சம் விலாவரியாவே சொல்றனே. எம்மவ ஒன்னுக்குப் போறதுனால எங்கம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையாயிடுது.

 

எங்கம்மா என்னடான்னா அஞ்சு வயசுப் புள்ள தெனம் ராத்திரியிலே ஒன்னுக்குப் போவுது பேசாம அவள மெட்ராஸ் ராமச்சந்திரா ஆசுபத்திரியில அட்மிட் பண்ணீரலாம் அப்படீங்குது. நான் சொன்னேன் அம்மா இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம் அட்மிட் ஆகற அளவுக்கு சிக்கலான விசயம் இல்லம்மான்னேன். ஆனா, அது எனக்கும் தெரியும்னு எங்கம்மா சொல்றாங்க. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போலாங்கறேன்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, அட வயசான மூட்டுவலி வர்றது, முதுகுவலி வர்றது இதெல்லாம் சகஜந்தா, இதெல்லாம் தெரிஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வரும்போது நம்ப முதல்வரே போய் ஆஸ்பத்திரில படுத்துக்குராறே. நம்ப புள்ளைய மட்டும் ஏன் ஆஸ்பத்திரில படுக்க வெக்கக் கூடாதுன்னு கேக்கறாங்க.

 

அட உங்களுக்கு இந்தியா. இலங்கை. சிங்கப்பூர். மலேசியான்னு 1431 பயோரியா பல்பொடி ரேஞ்சில பிரச்சனை. இந்தப் புள்ளைக்கு என்னங்க தலைவரே பிரச்சனை? அதையும் எங்கம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க ‘உனக்கென்னடா தெரியும்? நீ காலைல போனா ராத்திரி வர்ற. அதுக்குள்ள பாவம், புள்ள படற பாட்ட என்னான்னு நான் சொல்ல? அவ காலைல எந்திரிச்சவுடனே பல்லுவெளக்கனும். குளிக்கனும். இது பிரச்சனையில்லையா? அவ ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா ஹோம் வொர்க் எழுதனுமே அது பிரச்சனையில்லையா? முழுப்பரிட்சை வருதே அதுபிரச்சனையில்லையா? ஏன் சாயந்தரம் அவ “டோராவோட பயணங்கள்” பாக்கும்போது கரண்டு போயிடுதே அது பிரச்சனையில்லையா? பாவம்டா அவ’ங்கறாங்க.

 

அம்மா இதெல்லாம் சாதாரணம் தண்ணி ஊத்துனா குளிக்கிற பிரச்சனை தீர்ந்திடும். படிச்சா பரிச்சை பிரச்சனை தீந்திடும். கரண்டு வந்தா டோரா பிரச்சனை தீர்ந்திடும். இதுக்கெல்லாம் போயி ஆஸ்பத்திரிக்குப் போவாங்களான்னு நான் கேட்டேன். அதுக்கு, ‘போடா போக்கத்தவனே. நம்ம மொதலமைச்சரு உக்காந்து பேசுனா இலங்கை பிரச்சனை தீந்திடும். நின்னு மெரட்டுனா மத்திய அரசாங்கமே நடுங்கிரும். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு பெரிய மனுசனே ஆஸ்பத்திரியிலே சேர்ந்துட்டாரு. நீ என்னமோ இந்த பச்ச புள்ளய ஆஸ்பத்திரியில சேக்க உடமாட்டீங்கறே’ன்னு எம்மேல கோவப்படுறாங்க தலைவரே. நான் என்ன பண்றது. நீங்கதான் சொல்லனும்.

 

உங்க புண்ணியத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி வாங்கிதான் எங்க வீட்டுல ஒலையே கொதிக்குது அப்படி இருக்கும்போது மெட்ராஸ் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிய எல்லாம் டீவி நியூஸ்ல வரும்போது பாத்துக்கலாம் (டீவியும் உங்க புண்ணியம்) அவ்வளவுதான். மத்தபடி நம்ம ரேஞ்சுக்கெல்லாம் ரெண்டு ரூவா குடுத்து தர்மாஸ்பத்திரிலதான் பாக்க முடியும்னு (ரெண்டு ரூவா குடுத்தாத்தான் அது தர்ம ஆஸ்பத்திரி) எங்கம்மாகிட்ட சொல்லி ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு வரலாம்ணு பாத்தா எங்கம்மா, விடுதலைப் புலிக மாதிரி அப்பவும் சண்டைய நிறுத்துனபாடில்ல தலைவரே. அது சொல்லுது. அரிசி ஒரு ரூவா. ஆனா பஸ்டாண்டு பக்கம் போனா அவசரத்துக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு அஞ்சு ரூவா தர்றயில்ல. அத மாதிரி இதையும் அவசர பிரச்சனையா நெனச்சி செலவு பண்ணுங்குது.

 

இந்த இடத்துலதான் எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. உடனே ‘அம்மா இனிமே புள்ளைய பேசாம ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம். உங்க காலம் மாதிரியே அவ கை தலைய சுத்தி காத தொடும்போது ஸ்கூலுக்குப் போகட்டும். அப்படியே இந்த டீவிய தூக்கி பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளை பிளாஸ்டிக்குக்கு போட்டுடுவோம்’னு சொன்னேன். உடனே எங்கம்மா ‘ஆமாப்பா. பேசாம. அதையே பண்ணிரெலாம். பாவம் சின்ன வயசு அவளால முடியல அவ என்ன பண்ணுவா? நம்பனால நம்ப புள்ளையதான் ஸ்கூல விட்டு நிறுத்தமுடியும். பாவம் நம்ப முதலமைச்சர் பெரிய மனுசன். அவராலயும் முடியல. அவர முதலமைச்சரா இருக்கறதவிட்டு நிறுத்திரலாம்னு யாராச்சும் நினைச்சா தேவல’ன்னு சொல்றாங்க. நான் என்ன சொல்ல முடியும் தலைவரே?

 

எம் புள்ள இந்த பிஞ்சு வயசுலேயே ஸ்கூலுக்கு போலாமா வேண்டாமான்னுதான் நான் முடிவு பண்ண முடியும். ஏன்னா அவ எம் புள்ள. அதே மாதிரி நீங்க எங்க தலைவரு. உங்கனாலயும் முடியல. நீங்க சட்டசபைக்குப் போக வேண்டான்னு இந்த மக்கள் முடிவு பண்ண மாட்டேங்கறாங்க. உங்க மேல பாசமே இல்லாத மக்கள். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.

 

எம்புள்ள பாட்டி செத்ததுக்கு பத்து நாள் லீவு போட்டாலே அவங்க மிஸ்ஸூ ‘நீயெல்லாம் ஒரு நல்ல ஸ்டுடண்டா? டாக்டர் சர்டிபிக்கட் எங்க? இஞ்சினீயர் பிளான் எங்க’ன்னல்லாம் திட்டறாங்கலாம். நீங்க பல வருசமா சட்டசபைக்கே போகாம இருந்தீங்களே நீங்கெல்லாம் நல்ல எம்.எல்.ஏவான்னு உங்கள யாரும் கேள்வியே கேக்கலையே தலைவரே.

 

இந்திய குடிமகன்ற உரிமையை மட்டும் வெச்சுட்டு தமிழ் பேசி தமிழக கடலோரத்துல மீன புடிச்சிட்டிருந்த நானுத்தி சொச்சம் பேர இலங்கை ராணுவம் கொன்னு போட்டுச்சே அப்பக்கூட ஒரு நாட்டோட குடிமகனை காப்பாத்த வக்கில்லாத அரசாங்கம் என்ன அரசாங்கம்? அவன் உயிருக்கு உத்தரவாதம் தராத நாடு ஒரு நாடா? அப்படி ஒரு நாடு தேவையான்னு சத்தமா குரல் கொடுக்க கையாலாகாத இந்த மக்களா உங்கள அப்படியொரு கேள்வி கேக்கப் போறங்க?

 

எங்கேயோ பிரான்ஸ்ல ஒரு சீக்கிய இளைஞனோட தலப்பாகைய களைச்சிட்டு மயிர இழுத்து பாத்ததுக்கே கொதிச்சு எந்திரிச்சு அவனுக்காக பிரான்ஸ்கிட்ட பேச இந்திய மந்திரிய அனுப்பிச்சாங்க சீக்கிய மக்கள். அப்பக் கூட ‘அடே மத்திய அரசே சீக்கியனோட மயிருக்கிருக்கிற மரியாத கூட தமிழன் உயிருக்கு இல்லையா’ன்னு வீதிக்கு வந்து கேக்க நாதியத்த ஊமப் பயலுக உங்களப் பாத்து கேள்வி கேப்பாங்க? ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கே உரிய மத உணர்வுகளை மதிச்ச அரசாங்கமே தெனம் தெனம் செத்துப் பிழைக்கற தமிழ் மனித உயிர்களை ஏண்டா புரிஞ்சிக்கலன்னு ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கக் கூட கையாலாகாத இந்த தமிழனுகளா உங்களப் பாத்து விரல் நீட்டிப் பேசுவானுங்க? வாய்ப்பே இல்லை தலைவரே. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் தலைவரே. அதெல்லாம் ஏதோ உங்க மாதிரி ஆளுக பேச்சுல இருக்கிற புறநானுறுலயும். அகநானுறுலயும் கேக்கறதோட சரி. விஜயோட வில்லுலயும், விக்ரமோட அந்நியன்லேயும் பாக்கறதோட சரி.

 

ஊர்ல வேலவெட்டிக்குப் போகாத பெருசுக கோயில் அரசமரத் திண்ணைல உக்காந்திட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது பேசிட்டு இருந்ததை ஒரு நாள் கேட்டேன். (நான் ஏன் வேலைக்குப் போலைன்னு கேக்கமாட்டீங்க நீங்க. ஏன்னா இருக்கிற கரண்டு கட்டுல எல்லா வேலையும் என்ன லட்சணத்துல நடக்குதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்) அதுல ஒரு பழமொழி டக்குன்னு மனசுக்குள்ள வந்து அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துருச்சுங்க தலைவரே. அது என்னன்னா.

 

மேட்டங்காட்ட உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்.

 

அதென்னமோ நீங்க ஜெயலலிதா அம்மாவோட பழைய செருப்பு, புது செருப்பு, நகை, நட்டு, போல்டு எல்லாத்தையும் அப்போ உங்களோடதா இருந்த சன் டீவியில போட்டுப் போட்டு காட்டி அந்தம்மாவ மக்கள் முன்னாடி மேனா மினுக்கியாவே சித்தரிச்சுட்டீங்க. அந்தம்மாவுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டுனவனும் கெட்டான்னு நீங்க சொன்னதா நெனச்சுதான் நம்ம தமிழ்ப் பயலுகலெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு உங்கள மொதலமைச்சரா ஆக்குனாங்களோன்னு ஒரு சந்தேகம் எனக்கு. மேனாமினுக்கிக்கு மொதலமைச்சரா பட்டங்கட்டி கெடக் கூடாதுன்னு நெனச்ச வீணாபோன தமிழன் அப்படியே உங்களுக்கு ஓட்டக் குத்தனான் பாருங்க. அப்ப தெரியல நாம மேட்டாங்காட்ட உழுது கெடப்போறோம்னு. இப்ப புரிஞ்சுதுன்னு புலம்பி என்ன பிரியோஜனம் இல்லீங்களா தலைவரே.

 

இப்ப இன்னொன்னுங்கூட தோணுது தலைவரே. பேசாம இதுக்கு மேனா மினுக்கிய கட்டியே கெட்டிருக்கலாம். ஏன்னு கேளுங்க. அந்தம்மா மட்டும் இப்ப முதலமைச்சாரா இருந்திருந்தா எப்படியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராத்ததான் முடிவெடுத்திருப்பாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்) அப்படி ஒருசமயத்தில எதிர்கட்சியா மட்டும் நீங்க இருந்திருந்தா உங்களுக்கு முதுகுவலி வந்திருக்குமா? இல்ல முடியாமதான் போயிருக்குமா? அப்ப யாராச்சும் இந்த மாதிரி படுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க. எத்தனை பேருக்கு தமிழின துரோகின்னு பட்டங்கட்டியிருப்பீங்க? கால்குலேட்டர் வெச்சாவது கணக்குப் போட்டுப்பாருங்க. அப்படி ஒரு சூழல்ல முரசொலில நீங்க எழுதற லெடடர்களும் அதுல நீங்க குடுக்கற புள்ளி விவரங்களும் என்னவா இருந்திருக்கும். இன்னைக்கு தமிழ்நாடு பூர எழுச்சி உண்டுபண்ணியிருக்கிற முத்துக் குமாரோட இறுதியறிக்கை எழுத்தெல்லாம் உங்க எழுத்துக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறுமா? அவன மாதிரி ஒரு தமிழ் போராளி உயிர் போகுமளவுக்கு மந்தமாகத்தான் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பீங்களா? யோசுச்சுப் பாருங்க தலைவரே.

 

ஜெயலலிதா மட்டும் முதல்வரா இருந்திருந்தா வாழ்வோ, சாவோ, போராடிப் பாப்போம்னு எல்லாரும் அந்தம்மாவ எதிர்த்து நின்னிருப்பாங்க. ஆனா துரதிஸ்டவசமா நீங்க முதலமைச்சர். நீங்க போராட்டத்த முன்னெடுப்பீங்கற ஒரே காரணத்துக்கா தான் உங்களுக்காக எல்லாரும் காத்திருந்தாங்க. நீங்க என்ன செஞ்சீங்க? உங்களுக்கு முன்னால இருந்த வராலாற்றுக் கடமை என்ன? நீங்க செஞ்சிட்டு இருக்கிறது என்ன? நீங்க மட்டும் ஒரு தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தா ஒரு போராளி செத்திருப்பானா? யோசிச்சுப்பாருங்க தலைவரே.

 

இந்த நேரத்துல நாங்க ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் இல்ல இல்லை நீங்க அந்த கட்டாயத்துக்கு எங்கள தள்ளீட்டீங்க தலைவரே. உடலை எரிச்சு உயிரைவிட நாங்க எல்லாரும் தைரியசாலிகளில்லை. ஆனாலும் எதையாவது எரிச்சு எங்க எதிர்ப்பை காட்டுற அளவுக்கு எங்க ஒடம்புலயும் தன்மான தமிழ்ரத்தம் கொஞ்சமாச்சு ஓடுது. அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என் கைக்கு ஒரு சூட்ட போட்டுடலாம்னு இருக்கேன். ஓட்டுபோட அனுமதி அளிக்கிற உங்க அரசாங்கம் சூடுபோட அனுமதி தருமா? ஏன்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையான்னு எவனும் என்னப் பாத்து ஒரு கேள்வி கேட்டுற கூடாதில்லீங்களா தலைவரே!

 

உங்க அளவுக்கு இல்லைன்னாலும் உங்கள்ல ஒரு ஐஞ்சு பர்ஸண்ட் அறிவாவது இருந்திருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என்ன மாதிரி எல்லாருக்கும் முரசொலிலயோ. இல்ல என் மூக்கு சளிலயோ அலைகடலென திரண்டு வா உடன்பிறப்பே. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கைக்கு ஒரு சூட்டை போட சூரியனாய் எழுந்து வா உடன்பிறப்புகளேன்னு எழுதி ஒரு கூட்டங் கூட்டி இருப்பேன். ஆனா அந்த அளவுக்கு அறிவோ, பணமோ, அதிகார பலமோ இல்லாத என்னால என்ன பண்ணமுடியும்? தனியா ஒத்த ஆளா நின்னு இனிமே திமுகவுக்கு ஓட்டு போடுவியா கேட்டு என் வலது கையில வலிக்கிற மாதிரி ஒரு சூடு போடுவேன். இதுல உடன்பாடு இருக்கிற எல்லாரும் சேர்ந்து சூடுபோட போடலாம்னு முடிவெடுத்து ஒரு நாள் ஒரு இடம் ஒரு நேரம் குறிச்சா அதில நானும் ஒருத்தனா பங்கெடுக்க முடியும் அவ்வளவுதான்.

 

அடுத்தவன் போயிட்டு வந்ததுக்கு பேராசிரியர் விளக்கம் சொல்ற மாதிரி யார் யாரோ சூடு போட நான் ஏற்பாடு பண்ற அளவுக்கு என்னைய நான் இன்னும் வளர்த்துக்கல. ஆமா தலைவரே பேச்சுவார்த்தை நல்லாயிருக்கு. மேனனோட பயணம் ஓ.கே. பிரணாப் முகர்ஜியோட பயணம் ஓ.கே.ன்னு எல்லாம் சொல்றீங்களே. அப்ப நெஜமாலுமே இலங்கை அரசாங்கம் செய்றதெல்லாம் சரிதானுங்களா.

 

எனக்கு ஒரு சந்தேகம் முல்லைத்தீவு பகுதில 2 லட்சம் தமிழர்கள் மாட்டீட்டாங்க. இலங்கை அரசு இந்திய அரசு இவங்கல்லாம் சொல்ற மாதிரி புலிகள் தீவிரவாதிகள்னே வச்சிக்கிடுவோம். 2 லட்சம் தமிழர்கள் புலிகள் கிட்ட மாட்டி முல்லை தீவுல இருக்காங்கன்னே வச்சுக்குவோம். இப்ப இலங்கை அரசாங்கம் சொல்லுது மக்கள் வெளியே வராவிட்டால் அவர்கள் உயிருக்கு இலங்கை அரசு பொறுப்பேற்காதுன்னு. இது எந்த வகைல நியாயம்? விடுதலைப் புலிகளே தீவிரவாதிகளாச்சே. அவங்க மக்களை விடமாட்டாங்கதான அப்புறம் எப்படி அந்த மக்கள் வெளியே வருவாங்க. வெளியே வந்தா நீங்க சொல்ற மாதிரி புலிகள் கொல்லுவாங்க (ஏன்னா அவங்க தீவிரவாதிகள்) வரலைன்னா நீங்க குண்டு போடுவீங்க. அப்ப அந்த மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? இல்லையா?

 

ஆமா போனா மாசம் மும்பைல தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலை புடிச்சப்ப மக்களே நீங்களே வெளியே வந்திருங்க. இல்லைன்னா உங்க உயிருக்கு நாங்க பாதுகாப்பு தரமுடியாதுன்னு சொல்லி உங்க மத்திய அரசாங்கம் குண்டு போட்டிருந்தா மூனுநாள் யுத்தம் நடந்தே இருக்காதே. ஏன் குண்டு போடுல? அங்கிருந்தவனெல்லாம் முதலாளிகள். வெளிநாட்டுக்காரர்கள். ஏன்? என்ன காரணத்துனால உங்க மத்திய அரசு தாஜ் ஹோட்டல் மேல குண்டு போடல? ஒருவேளை இழிச்சவாய தமிழ்ப் பயலுக மட்டும் உள்ளார இருந்திருந்தா குண்டு போட்டிருப்பீங்க. ஏன்னா கேக்க நாதியத்த கேணப்பயலுகதான தமிழ் பயலுக.

 

நீங்க சொல்லுங்க தலைவரே. மும்பைல தீவிரவாதிகள் மேல இந்திய இராணுவம் குண்டு போடாதது சரின்னா. முல்லைத்தீவுல புலிகள் மீது குண்டு போடாம இருக்கறதுதானே சரி. முல்லைத்தீவுல குண்டு போடறது சரின்னா? இந்திய ராணுவம் தாஜ் ஹோட்டல் மேல குண்டு போட்டு ஒரேநாள்ள தீவிரவாதிகள அழிச்சிருக்கலாம்ல. அது தான சரி. ஒரு பதிலச் சொல்லுங்க தலைவரே.

 

இதையெல்லாம் ஏன் காங்கிரஸ்காரங்கிட்ட கேக்காம உங்ககிட்ட கேக்கறோம் தெரியுங்களா தலைவரே! அவனெல்லம் ஒரு ஆளு மயிருனு நமக்கு சமானமா ஒக்கார வெச்சுப் பேச நானொன்னும் மானங்கெட்ட திமுககாரனில்லீங்க தலைவரே.

நம்ம வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அய்யா முன்ன ஒருதடவை கூட்டத்துல பேசும்போது சொன்னாரு “காங்கிரஸ்காரன திட்டாதீங்கய்ய! அவன் ஒரு கோயில் மாடு. அத பாத்தீங்கன்னா கொஞ்ச நேரம் குப்ப தொட்டீல வாய வெக்கும். அப்பறம் மார்கெட்டுக்கு வரும். கொஞ்ச நேரம் மார்கெட்டுலயும் வாய வெக்கும். யாரும் அத திட்டமாட்டங்க. ஏன்ன அது கோயில் மாடு. காங்கிரஸ்காரனும் அப்பிடிதான். கொஞ்ச நாள் திமுக கூட இருப்பான். கொஞ்ச நாள் அதிமுக கூட இருப்பான். அவன திட்டாதீங்கய்ய பாவம் அவன் ஒரு கோயில் மாடு” அதனாலதான் அவன நாங்க திட்டல தலைவரே. அப்பறம் மார்கெட் யாரு குப்ப தொட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்களே. ஏன்னா செல்வேந்திரன் அய்யா நாங்க கேட்டா இப்ப சொல்ல மாட்டாரு.

 

எந்த மொழி பேசி உங்க வாழ்க்கையை துவங்கினீங்களோ, எந்த மொழி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்ததோ, எந்த மொழிபேசுகிற மக்கள் உங்களை உலக தலைவர்ன்னு கொண்டாடுகிறாங்களோ, அந்த மொழி பேசுகிற ஒரேயொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, இருக்க இடம், குடிக்க நீர் ஏதுமின்றி அனாதைகளாக அலையுறாங்களே…… நம்ம மொழி பேசுகிற அந்த மக்கள் உங்கள் சமகாலத்தில் சமாதியாக்கப்பட்டால் அதை அப்படியே சரித்திரம் பதிவு செய்யுமே என்ன செய்ய போகிறீங்க?

 

தயவு செய்து அவங்களுக்கும் உங்க இதயத்துல இடம் இருக்குதுன்னு மட்டும் சொல்லீறாதீங்க. ஏன்னா தேர்தல்ல நிக்க கூட இடங்குடுக்காதவங்களுக்கு எல்லாம் நீங்க இதயத்திலதான் இடம் கொடுப்பீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஈழத்துல நம்ம மக்கள் உட்கார, நிற்க, நடக்க சுதந்திரமாக வாழ, தன்னைத்தானே ஆள ஒரு நிலத்தை கேக்கறாங்க. அதுக்காக போராடறாங்க. அதுனால தயுவு செஞ்சு அவங்களுக்கு உங்க இதயத்துல இடங்குடுத்து கேவலப்படுத்தீறாதீங்க தலைவரே

 

கடைசி ஒன்னே ஒன்னு அந்த ஒன்னுக்கு மேட்டருதான் தலைவரே! இரண்டு, மூணு நாளா புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. அதனால ராத்திரியில அவ ஒன்னுக்கும் போறதில்ல. ஒரு வழியா பிரச்சனை எனக்கு முடிஞ்சிபோச்சுது. நீங்களும் பேசாம இன்னைல்ல இருந்து மொதலமைச்சரா போறதில்லைன்னு ஒரு முடிவு பண்ணுங்க. ஒரு வேள உங்க முதுகுவலி போனாலும் போயிரும்

 

இப்படிக்கு
இரா.செந்தில்குமார்

 

பின் குறிப்பு: ஒரு மூத்த தலைவருடைய உடல்நலக் குறைவை மோசமாக விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லைதான் இருந்தாலும் என் கோபம் உண்மையானதெனில் அதில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரிகமாக நான் கோபப்பட்டால் அதில் உண்மை இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு வலிக்கும்தான் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் உங்களையே நம்பி இருந்த என் போன்றவர்களின் இதயத்திலிருக்கும் வலியோடு ஒப்பிட்டால் உங்கள் வலி ஒரு பொருட்டல்ல…. ஓட்டுப்போட எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ திட்டவும் அதே உரிமை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

 

 இரா.செந்தில்குமார் (covaibhai@gmail.com

  நன்றி-கீற்று.காம்

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க) – ஆதவன் தீட்சண்யா

Posted in ஆதவன் தீட்சண்யா, இந்தியா டுடே, இந்து பாசிச வெறி, விமர்சனங்கள், SOCIAL ISSUES on திசெம்பர் 16, 2008 by குட்டகொழப்பி

அஞ்சலி என்ற பெயரில் ‘இந்தியா டுடே’ கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

………………………………………………………………………………………………………..

இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

V.P.Singh இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா…? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்…. இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை… ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்…. கொலைகள்… கொள்ளைகள்… பாலியல் வன்கொடுமைகள்…. காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ… வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.


ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

நன்றி-கீற்று.காம்

ஞாநியின் ஓ பக்கங்கள் – பத்திரிகையாளர்களின் ஓட்டைக் கண்டனங்கள்!!

Posted in விமர்சனங்கள் on ஜனவரி 23, 2008 by குட்டகொழப்பி

aiyo-aiyo.jpg

    

தமிழக முதல்வரும், திமு க. தலைவருமான கருணாநிதியைக் கொச்சைப்படுத்தி, ஆனந்த விகடனில், பத்திரிகையாளர் ஞாநியின் “விருப்பப்படி இருக்க விடுங்கள்” என்ற தலைப்பில் எழுதியதை அனைத்துத் தரபினரும் கண்டித்துள்ளனர்।இதனிடையே, ஞாநியின் அநாகரீகமான எழுத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். ‘தீம்புனல்’ சார்பில் சென்னை வாணி மகாலில் 20.10.07 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 10 மணிவரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கவிஞர் இளையபாரதி வரவேற்று பேசினார். கவிஞர் தமிழச்சி முகவுரை ஆற்றினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கவிஞர் அறிவுமதி, கவிஞர் கரிகாலன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் சல்மா, எழுத்தாளர் இமயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு, தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் பிரபஞசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறையன்பன் குத்தூஸ் சிறப்புப் பாடல் பாடினார்.

கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்…. இதோ விமர்சனங்கள்…….

முகப்புரைக்கேற்ற – தமிழச்சி
தனி மனிதக் கண்டனக் கூட்டம் தேவை தானா ! என நாங்கள் நினைத்த பொழுது- புரிந்தும் புரியாமலும்
விளக்கி- நீ என்ன மாமனா மச்சானா என்ற கேள்வியோடு முடித்து கொண்டார்

தொரப்பாடி ஜெயிலுக்குள்ளே! – அறிவுமதி
பாவம் பெரியாரின் முகத்தைப் பெரியவரிடம்
காண்கிறார்! – சரி இருக்கட்டும்
தொண்ணூற்று மூன்றாம் வயதிலும் போராடிய பெரியாரின் தியாகத்தை – நினைத்து
கம்முகிரார்! விம்முகிறார்!- ஆனால் வெளிவரும் கண்ணீர் பெரியவருக்காக?- என வைத்துக்கொள்வோம்!
உணர்ச்சி வசப்படுதல் என்பது – தற்காலிகமானது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?

பேராசிரியர் அ.மார்க்ஸ் பேச்சு அக்மார்க்
பெரியவர் புராணம் இல்லை
ஞாநியின் வஞ்ச இகழ்ச்சியினை
தெளிவு பெற எடுத்துக்காட்டி
கனிமொழியிடம் சில கேள்விகளையும்
தொடுத்து- மொழியின் மவுனததைக் கலைக்க வேண்டுமெனக் கூறி கலகலத்தார் – நாங்களுந்தான்

பிழைக்கக் கற்று கொண்ட – ரவிக்குமார்
பெரியாரையே பழித்த பெரியவர் இவர்?- ஆக பெரியவர் புராணத்தையும் படிகத்தவறவில்லை அக மகிழ்ந்தார்! புகழ்ந்தார்! ஆர்ப்பரித்தார்- பிறகு நாட்டையே மாற்றும் வண்ணப் பெட்டியைக் கொடுப்பவரல்லவா!
தமிழகப் பெரியவர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தவரல்லவா- நடைமுறைப்படுத்தாமல் பேசாமல் நீவிர் பெரியவர் கழகத்திலேயே தஞ்சம் அடையலாம்!
தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்கிறீரோ
அதுவும் சரிதான்……

வானம் வசப்படும்- பிரபஞ்சதிட்டம்
பெரியார் புராணமும் பாடவில்லை
பெரியவர் புராணமும் இல்லை
சுயப்புராணம் ஒன்றே இவருக்கு தெரிந்தது
ஞாநி யார்? ஞானி யார்?
என்று புரிய வைத்தது இவர் தானாம்
இந்த ஞாநிக்கு அஞ்ஞாநி என்று
பெயர் வைத்ததும் இவர் தானாம் – என்கிறது
இவர் புராணம.
உலகப் பத்திரிகையாளர்-எ.ஸ்.பன்னீர் செல்வம்
ஏனோ இவரிடம் அவாள் வாடை வீசுகின்றது
படிச்சுண்டு! சொல்லிண்டு! கேட்டுண்டு!
ஞாநியை சிவப்பு சட்டைப் போட்டுக்கொண்டு- காவி வார்த்தை பேசாதே என்றார்.
கருத்தில் தெளிவு- ஆனாலும்
இட ஒதுக்கீடு- பகுத்தறிவு போட்ட பிச்சை என்று கொச்சை வார்த்தை பேசிக் காயப்படுத்தினார்।

இவை எல்லாம் இருக்கட்டும்
ஞாநி வார்த்தை கண்டனத்திற்கு உரியதே!

வேட்டியில் மூத்திரம் போய்விட்டதாக
ஓலமிடுகிராயே – முதலில் நீ உன்
கோவணத்தை சுத்தமாக வைத்துக்கொள்
மற்றவரிடம் இருக்கும் பொது நற்குணத்தைப்
பார்க்காமல்- உடற்கோளாரைப் பற்றி
சொல்கிறாயே- இதுதான் அறிந்தும்
அறியாமலும் நீ அறிந்து கொண்டதா…..
உனது பக்கங்கள் ஓ பக்கங்கள் அல்ல!
ஓட்டைப் பக்கங்கள்!

தீம்புனல் படைப்பாளிகள் அமைப்பு
வேதாந்தியிடம் வேதம் கற்கச்
சென்றிருந்ததோ-ஃபத்வாவின் பொழுது
உன் தீ என்ன கனலாக இருந்ததோ! மூடர்களே உங்களுக்குத் தெரியாதா! தீயின் கனல் தான்
பெருந்தீயை உருவாக்குமென்று!- ஓ
அந்த ஆரியத் தீயை இந்தத் தீயால்
எரிக்க முடியாதென்ற அறியாமையோ!!!!!!